கேரள முதல்வருடன் பதவியேற்கும் 20 அமைச்சர்கள்!
கேரளத்தின் முதல்வராக காங்கிரல் மூத்த தலைவரான வி.டி. சதீசனுடன் பதவியேற்கும் 20 அமைச்சரவைக் குழு குறித்து...
திருவனந்தபுரம்: கேரளத்தில் அமையவுள்ள புதிய அரசின் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, கேரளத்தின் முதல்வராக திங்கள்கிழமை(மே 18) பதவியேற்கவுள்ள காங்கிரல் மூத்த தலைவரான வி.டி. சதீசன், ஞாயிற்றுக்கிழமையன்று தனது 20 அமைச்சரவைக் குழுவை அறிவித்தார். அவர்கள் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பதவியேற்கின்றனர்.
கூட்டணிக்குள் சமூக மற்றும் பிராந்திய சமநிலையைக் கருத்தில் கொண்டு, கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கிடையே நடைபெற்ற கலந்தாலோசனைகளுக்குப் பிறகே அமைச்சர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டது என்றும், அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டன என்றும் வி.டி. சதீசன் தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களான ரமேஷ் சென்னிதலா, கே. முரளீதரன் மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சன்னி ஜோசப், பிந்து கிருஷ்ணா, ஏ.பி.அனில் குமாா், பி.சி. விஷ்ணுநாத், எம். லிஜு, ரோஜி எம். ஜான், டி. சித்திக், ஓ.ஜே. ஜானீஷ் மற்றும் கே.ஏ. துளசி, பி.கே.குஞ்ஞாலிக்குட்டி, என்.ஷம்சுதீன், கே.எம்.ஷாஜி, பி.கே.பஷீா், வி.இ.அப்துல் கஃபூா்(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஆகிய 5 பேரும் இடம்பெற்றுள்ளனா். கேரள காங்கிரஸ் ஜோசப், கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) கட்சியைச் சேர்ந்த அனூப் ஜாகோப், புரட்சிகர சோஷலிஸ கட்சி, கம்யூனிஸ்ட் மாா்க்சிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஓரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அமைச்சரவை அனுபவமும் தலைமுறை மாற்றமும் கலந்த ஒன்றாகத் திகழ்கிறது; 20 அமைச்சர்களில் 14 போ் புதுமுகங்களாவா் என்றும் அவர் கூறினார். இது கேரளம் அரசியலில் ஒரு புதிய முகத்தை முன்னிறுத்துவதற்கான காங்கிரஸ் தலைமையின் முயற்சியை உணர்த்துகிறது.
Advertisement
Advertisement
60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு முழுமையான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அமைச்சரவையும் ஒரே நேரத்தில் பதவியேற்கும் நிகழ்வு இது. கேரளம் வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத ஒரு சாதனையாகும். தேர்தல்களுக்குப் பிறகும், யுடிஎஃப் அணி அதே யுடிஎஃப் அணியாகவேத் தொடர்வதால்தான் இது சாத்தியமானது. தலைவர்கள் ஒருவருக்கொருவர் மரியாதை அளிக்கின்றனர் என்று அவர் கூறினார்.
இந்த அமைச்சரவை கூட்டணிக் கட்சிகளுக்கும், பெண்கள் மற்றும் பட்டியல் சாதித் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்கிறது.
காங்கிரஸ் மூத்த எம்எல்ஏ திருவஞ்சூா் ராதாகிருஷ்ணனுக்கு பேரவைத் தலைவராகவும், துணைத் தலைவராக ஷானிமோல் உஸ்மானை நியமிக்க கூட்டணி தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழா கேரளம் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் மைதானத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தப் பதவியேற்பு விழா, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஒரு மிகப்பெரிய அரசியல் பலப் பிரகடன நிகழ்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆளும் கா்நாடக முதல்வா் சித்தராமையா, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, ஹிமாசல பிரதேசம் முதல்வா் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன், பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் பினோய் விஸ்வம் மற்றும் பல அரசியல் தலைவர்களும் அழைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சதீசன் மேலும் தெரிவித்தார்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வரும், காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய்க்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. எனினும், விழாவில் பங்கேற்பதை விஜய் தரப்பில் இன்னும் உறுதி செய்யவில்லை என்று வி.டி.சதீசன் தெரிவித்தாா்.
ஆறு முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வி.டி. சதீசன், 10 நாள்கள் நடைபெற்ற தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு, முதல்வராக காங்கிரஸ் மேலிடத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இந்த பதவிக்கு மூத்த தலைவர்களான கே.சி. வேணுகோபால் மற்றும் ரமேஷ் சென்னித்தலா ஆகியோரும் முக்கியப் போட்டியாளர்களாகத் திகழ்ந்தனர். இருப்பினும், ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்ற பேரவைத் தேர்தலில், ஐக்கிய ஜனநாயக முன்னணியை (யுடிஎஃப்) அமோக வெற்றிக்கு இட்டுச் சென்ற, மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்ற சதீசனையே இறுதியில் கட்சித் தலைமை தேர்ந்தெடுத்தது.
Kerala Chief Minister-designate V D Satheesan on Sunday announced his ministerial team ahead of the swearing-in ceremony of the new government in the state.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.