குடியரசில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!
காங்கிரஸ் தலைவர் கார்கே உரையாற்றிய இடத்தில் சுத்தம் செய்வதாக வேள்வி நடத்தப்பட்டதற்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் கண்டனம்...
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றிய இடத்தைச் சுத்தம் செய்வதாக வேள்வி நடத்தியதற்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்டின் ஹல்த்வானியிலுள்ள ராம்லீலா திடலில், கடந்த ஆக. 8 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பேரணியில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் கார்கே அங்கு உரையாற்றினார்.
இதையடுத்து, காங்கிரஸ் பேரணி முடிந்தவுடன் அவர் உரையாற்றிய இடத்தை சுத்தம் செய்வதாக, ஸ்ரீராம் சேனை அமைப்பினர் வேள்வி நடத்தியதாகவும், இந்த அமைப்புக்கும் பாஜகவுக்கும் தொடர்புள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்தச் சம்பவம் குறித்து, மாநிலங்களவையில் கார்கே குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு முக்கிய தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நமது குடியரசில் தீண்டாமைக்கு இடமில்லை எனக் குறிப்பிட்டு இந்தச் சம்பவத்துக்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் இன்று (ஆக. 13) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“கார்கேவுக்கு எதிரான இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது ஒரு தனிநபருக்கு மட்டுமல்ல, சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகிய அரசியலமைப்பு நெறிகளை அவமதிக்கும் செயலாகும்.
பிஜேபியும் சங்கபரிவாரும் வரலாற்றை மாற்றி எழுத முயற்சி செய்யலாம், ஆனால் தலித் மக்களி பங்களிப்பை ஒருபோதும் அழிக்க முடியாது.
நமது குடியரசில் தீண்டாமைக்கு இடமில்லை. இந்த வெறுப்புக்கு எதிராக இந்தியா ஒன்றாக நிற்க வேண்டும். இந்தச் செயலை கேரளம் வன்மையாக கண்டிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
Kerala CM V.D. Satheesan has condemned the performance of a yagam to purify the venue where Kharge had addressed a gathering.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.