கேரள முதல்வரின் வாகனத்தைத் தடுத்து வாக்குவாதம்! காங்கிரஸ் உறுப்பினர் கைது!
கேரள முதல்வர் வி.டி. சதீசனின் பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்த காங்கிரஸ் உறுப்பினர் கைது...
கேரள முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வி.டி. சதீசனின் பாதுகாப்பு வாகன அணியைத் தடுத்து நிறுத்திய காங்கிரஸ் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில், வெள்ளிக்கிழமை (ஆக. 28) மாலை ஓணம் பண்டிகையை முன்னிட்டு செந்தி பகுதியில் உள்ளூர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த கொண்டாட்ட நிகழ்ச்சியில், கேரள முதல்வர் வி.டி. சதீசன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், செந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் முதல்வர் சதீசன் செம்பழந்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றதைத் தொடர்ந்து, திருவனந்தபுர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரான செந்தி அனில் என்பவர் தலைமையிலான உறுப்பினர்கள் முதல்வரின் பாதுகாப்பு வாகன அணியின் பாதையில் நின்று வழிவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய முதல்வர் சதீசனுடன் செந்தி அனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறையினர் தலையிட்டு வழிவிட மறுத்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் நடந்த சில மணிநேரங்களில் வெள்ளிக்கிழமை இரவு செந்தி அனிலை கேரள காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சனிக்கிழமை காலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், திருவனந்தபுர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தி அனில் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே, தாக்குதல், மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய செந்தி அனில், தற்போது காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
A Congress member has been arrested for blocking the security convoy of Kerala CM V.D. Satheesan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.