‘கனிம வள ஏற்றுமதிக்கான தடையை நீக்குக’... தமிழக அரசுக்கு கேரள முதல்வர் சதீசன் கடிதம்!
கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கக் கோரி விஜய்க்கு கேரள முதல்வர் வி.டி. சதீஷன் கடிதம்...
கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் வி.டி. சதீஷன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து கேரளம், கர்நாடகம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களுக்கு அதிகளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதால், தமிழ்நாட்டில் செயற்கையாக கனிம வளத் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், தங்கு தடையின்றிப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய இந்த தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என கேரள முதல்வர் வி.டி. சதீசன், தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக கேரள முதல்வர் வி.டி. சதீசன் எழுதியுள்ள கடிதத்தில், “புவியியல் அமைவிடத்துக்கு அருகே பண்பாடு மற்றும் கலாசாரப் பிணைப்பு, பாரம்பரியம், பரஸ்பர ஒத்துழைப்பின் வாயிலாக தமிழ்நாடு மற்றும் கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களும் தனித்துவமான மற்றும் நீண்ட உறவைக் கொண்டுள்ளன.
நம்முடைய இரண்டு மாநிலத்தின் அரசுகளும் மக்களின் நலனையும் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காக, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கேரளத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைப் பாதிக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் பற்றி உங்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
ஜூலை 7 ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசின் உத்தரவு 306-ல் கற்கள் மற்றும் கட்டுமானப் பொருள்களின் ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதனால், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து கேரளத்துக்கு கற்கள் கொண்டு செல்லப்படுவது கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு செயல்படுத்துவதற்கு கற்களுக்கான முழுத் தேவைக்கு மாவட்டங்கள் ஆதாரமாக இருந்து வருகின்றன.
உங்களுக்கே தெரியும்.. கேரளத்தில் உள்கட்டமைப்புகளுக்குத் தேவையான ஜல்லிக்கற்களுக்கு இங்கு பற்றாக்குறை உள்ளது. கேரளத்தில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு கணிசமான அளவிலான கனிம வளங்கள் தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களில் இருந்தே பெறப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு விதித்துள்ள கனிம வள ஏற்றுமதிக்கான தடையால், கேரளத்தில் பல்வேறு திட்டங்களை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலைத் திட்டங்கள் கேரளம் மட்டுமின்றி, தென்னிந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், மற்ற மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து, சுற்றுலா ஆகியவற்றையும் மேம்படுத்தும்” எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.