FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நீச்சல் குளத்தில் காத்திருந்த எமன்! குழந்தைகளை நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச் சென்ற தந்தை மரணம்!

நீச்சல் குளப்பணியாளர் ஒருவரத் கூற்றுப்படி கடந்த மூன்று மாதங்களாகத் தான் சஃபியுல்லா தனது குழந்தைகளை நீச்சல் கற்றுக் கொள்ள இங்கு அழைத்து வந்து கொண்டிருந்தார் எனத் தெரிகிறது.

Updated On : 14 மார்ச் 2018, 4:45 pm IST
பகிர்:

சென்னை மெரினாவில் இருக்கும் கார்ப்பரேஷன் நீச்சல் குளத்தில் 38 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் நேற்று மூழ்கி இறந்தார். அவர் மண்ணடி, டஹ்ம்பு செட்டித் தெருவைச் சேர்ந்த சஃபியுல்லா என அடையாளம் காணப்பட்டார். தனியார் நிறுவனமொன்றில் மேலாளராகப் பணியாற்றிய சஃபியுல்லா தினமும் காலையில் தன் குழந்தைகளை நீச்சல் கற்றுக் கொள்ள மெரினா நீச்சல் குளத்துக்கு அழைத்து வருவது வழக்கம் எனக் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. வழக்கம் போல செவ்வாயன்று காலை 7.30 மணியளவில் தனது மகனையும், மகளையும் நீச்சல் பயிற்சிக்கு அழைத்து வந்த சஃபியுல்லா அவர்களை நீச்சல் பயிற்றுநரிடம் ஒப்படைத்து விட்டு தானும் சற்று நேரம் நீந்தலாம் என முடிவு செய்து குளத்தில் குதித்திருக்கிறார். குதித்த மாயத்தில் சஃபியுல்லா மூச்சுத் திணறி இறந்திருக்கிறார். அவர் குதித்த நீச்சல் குளத்தில் ஆழம் 2.5 அடி மட்டுமே. எனவே ஆழத்தின் காரணமாக நிகழ்ந்த மரணமாக இருக்க வாய்ப்பு இல்லை என அண்ணா சதுக்க காவல்நிலைய காவலர்கள் தெரிவித்தனர்.

நீச்சல் குளத்தில் குதித்த வேகத்தில் சஃபியுல்லாவுக்கு திடீர் இருதய அடைப்பு ஏற்பட்டு அதனால் நினைவு தப்பி இறப்பு நிகழ வாய்ப்புண்டா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. சஃபியுல்லாவுடன் நீச்சல் குளத்தில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு விரைந்த போதும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை. வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதென மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்காக ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது சஃபியுல்லாவின் உடல்.

Advertisement

Advertisement

தற்போது நீச்சல் குளத்தில் மூழ்கி மூச்சுத்திணறி மரணம் என்று வழக்குப் பதியப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது சஃபியுல்லா மரணம். 

காவலர்களின் கூற்றுப்படி ஆழம் குறைந்த அந்த நீச்சல் குளத்தில் நீச்சல் தெரிந்த மனிதர்கள் விழுந்து மரணமடைய வாய்ப்பில்லை என்று கூறப்பட்டாலும், பரிசோதனை முடிவு வந்த பிறகே இறப்பு எப்படி நிகழ்ந்தது என்று கூற முடியும் என அண்ணா சதுக்க காவலர்கள் தெரிவித்தனர்.

நீச்சல் குளப்பணியாளர் ஒருவரத் கூற்றுப்படி கடந்த மூன்று மாதங்களாகத் தான் சஃபியுல்லா தனது குழந்தைகளை நீச்சல் கற்றுக் கொள்ள இங்கு அழைத்து வந்து கொண்டிருந்தார் எனத் தெரிகிறது.

30 பணியாளர்கள், 6 சிசிடிவி காமிராக்களுடன் இயங்கி வரும் மெரீனா நீச்சல் குளத்தில் நேற்று நிகழ்ந்த இந்த மரணத்தையொட்டி தற்போது நீச்சல் குளம் மூடப்பட்டுள்ளது. மீண்டும் அடுத்த திங்களன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments