நகம் உடைகிறதா? வீட்டிலேயே இதைச் செய்து பாருங்கள்!
நகங்கள் பராமரிப்பு மற்றும் நகம் உடைவதற்கான தீர்வு பற்றி...
நகங்களை அழகுபடுத்துவதில் பெண்கள் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அதிலும் 'நெயில் ஆர்ட்' என்பது தற்போது பிரபலமாக உள்ளது. ஆனால், நகங்களை அழகுபடுத்துவதற்கு அவை உடையாமல் இருக்க வேண்டும்.
ஊட்டச்சத்து குறைபாடு, அதிகப்படியான ரசாயனப் பயன்பாடு (நெயில் பாலிஷில் ரசாயனங்கள்) உள்ளிட்ட காரணங்களால் நகங்கள் உடையலாம்.
இதனைத் தவிர்க்க, நல்ல ஊட்டச் சத்துள்ள குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த உணவைச் சாப்பிடுவதுடன், கைகளையும் நகங்களையும் ஈரப்பதமாக வைத்திருக்க தேங்காய் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்.
Advertisement
Advertisement
அசிட்டோன் இல்லாத நெயில் பாலிஷ் ரிமூவர்களைப் பயன்படுத்த வேண்டும். வீட்டு வேலை செய்யும்போது நகங்களில் அழுக்கு அல்லது ரசாயனம் சேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும், கைகளில் பாதுகாப்பு உறைகள் அணிந்துகொள்ளலாம்.
எளிமையான தீர்வு
சாதம் வடித்த தண்ணீர், தலைமுடிக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல இந்த தண்ணீர், நகங்களையும் உடையாமல் பாதுகாக்கும்.
அரிசி நீரில் அமினோ அமிலங்கள், தாதுக்கள், ஆன்டி - ஆக்சிடன்ட், கார்போஹைடிரேட் உள்ளிட்டவை இருப்பதால் நகங்களை வலிமையாக்குகின்றன.
சாதம் வடித்த அந்த தண்ணீர் ஆறியதும், 10 முதல் 15 நிமிடங்கள் வரை நகங்களை அதில் நனைக்க வேண்டும். அதன்பின்னர் சிறிதுநேரம் விட்டு பின்னர் சாதாரண தண்ணீர் கொண்டு நகங்களை அலச வேண்டும். தொடர்ந்து எண்ணெய் கொண்டு லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.
தொடர்ச்சியாக இவ்வாறு செய்துவர நகங்கள் உடையாமல் இருக்கும். வாரத்திற்கு 2 முதல் 3 முறை இவ்வாறு செய்யலாம்.
ஏதேனும் பொருள்களைத் திறப்பதற்கு நகங்களைப் பயன்படுத்துவது, நெய் பாலிஷை நகங்களாலே அகற்றுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]