FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நூல் அரங்கம்

திருவாசகம்

திருவாசகம் - மூலமும் உரையும் - உரையாசிரியர்: தமிழ்ப்பிரியன்; பக்.552; ரூ.200; அருணா பப்ளிகேஷன்ஸ், 12, முதல் தெரு, ஜெகன்நாத நகர், வில்லிவாக்கம், சென்னை-49; )044-2650 7131.

Updated On : 16 ஜூலை 2017, 11:59 pm IST
பகிர்:

திருவாசகம் - மூலமும் உரையும் - உரையாசிரியர்: தமிழ்ப்பிரியன்; பக்.552; ரூ.200; அருணா பப்ளிகேஷன்ஸ், 12, முதல் தெரு, ஜெகன்நாத நகர், வில்லிவாக்கம், சென்னை-49; )044-2650 7131.
திருவாசகத்திற்கு தற்போது வெளிவரும் உரை நூல்கள் பாட்டின் பொருள் உணர்ந்த விளக்கவுரைகளாக இல்லை. நுட்பமான விளக்கவுரைகள் ஏற்கெனவே பல உள்ள ஒரு ஞான நூலுக்கு, மேன்மேலும் விளக்கவுரை எழுதுவது தேவையில்லாதது. இதனால், பாடல்களில் பிழை, பொருட்பிழை, அச்சுப்பிழை, "பா' வகைகளில் பிழை எனப் பல பிழைகள் மலிந்தே வெளிவருகின்றன. இந்நூலும் அதற்கு விதிவிலக்கல்ல. அதாவது, பத்தோடு பதினொன்றுதான் இந்நூல்.
சிவபுராணத்தில், "மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை' என்பது திருத்தமான பாடல் வரி. ஆனால், "வாயிற் குழலை' என்றுள்ளது. வாயில் குடில் என்றால், ஒன்பது ஓட்டைகள் உடைய மனித உடம்பு என்று பொருள். "குழல்' என்பதன் பொருள் தலைமுடி, ஓர் இசைக்கருவி! அதே பதிகத்தில், "சொல்லித் திருவடிக்கீழ்' என்பது, "சொல்லத் திருவடிக்கீழ்' என்றுள்ளது. கீர்த்தித் திருவகவலில், "கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்' என்பது, "இராத வேடமொடு' என்றுள்ளது. கிராத வேடம் என்றால் - வேடன் உருவம் என்று பொருள். "இராத' என்பதற்கு உரையாசிரியர்தான் பொருள் சொல்ல வேண்டும்.
திருவண்டப்பகுதியில், "கீடம் புரையும் கிழவோன்' என்பது, "கடம் புரையும்' என்றுள்ளது. கீடம் என்றால் சிறு புழு என்று பொருள். கடம் என்றால் என்ன பொருள்? இசைக்கருவியா? அடுத்து, "விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தேன்' என்பது, "வின் முதற்' என்று இரண்டு சுழி உள்ளது. விண்- என்றால் ஆகாயம். வின்- என்றால் என்ன? திருவம்மானை பதிகத்தில் 13ஆவது பாடலில், "சேர்ந்தறியாக கையானை' என்பதற்கான உண்மையான விளக்கம் தரப்படவில்லை. இப்படிப் பல பொருட்பிழைகள். என்றாலும், எளிய விளக்க உரையுடன், சந்தி பிரிக்காமல் பாடல்களைத் தந்ததுடன், சொற்பொருள் விளக்கமும் தந்திருப்பதைப் பாராட்டலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments