FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மீன ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - 2022

மீன ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.  

Updated On : 8 மார்ச் 2022, 5:00 am IST
பகிர்:

மீன ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.  

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் உதவிகரமாகத் திகழவேண்டுமென்ற எண்ணம் கொண்ட மீன ராசி அன்பர்களே!!

Advertisement

Advertisement

கிரகநிலை

ராகு பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும் - கேது பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் - சனி பகவான் லாப ஸ்தானத்திலும் - குரு பகவான் விரைய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.       

இந்த பெயர்ச்சியின் மூலம் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் மறையும். வீண் வம்பு, வழக்குகள் முடிவிற்கு வரும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் அனுகூலப்பலன் கிட்டும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் ஓரளவுக்கு லாபம் அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டார பழக்கவழக்கங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எந்த எதிர்ப்பையும் எதிர் கொண்டு வெற்றியினைப் பெறுவீர்கள். கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும்.

பொருளாதார நிலை

குடும்ப ஒற்றுமை சுமாராகத்தான் இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உற்றார் - உறவினர்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அசையும் - அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல் - வாங்கல்

பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலமென்பதால கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். பணவிஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதினால் வீண்பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வீண் வம்பு, வழக்குகள் ஏற்படும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் சுமாராகத்தன் நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. புதிய கூட்டாளிகளால் தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமுடனிருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

உத்தியோகம்

பணியில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். செய்யும் பணியில் இடையூறுகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப்பளுவை குறைத்துக்கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானமுடனிருப்பது நல்லது.

அரசியல்

மக்களின் ஆதரவு சிறப்பாக இருந்தாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் இடையூறுகள் உண்டாகும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்தாலும் எந்தவொரு காரியத்திலும் திருப்தி இருக்காது. உடன் பழகுபவர்களுடன் எச்சரிக்கையுடனிருப்பது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் விலைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்காது. இதனால் பட்ட பாட்டிற்கு பலன் குறைவாக இருக்கும். நீர்வரத்து குறைவதால் பயிரிட அதிக செலவு ஏற்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் விரயங்கள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளிலும் தாமத நிலை ஏற்படும்.

பெண்கள்

உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியாமல் போகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன் - மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும்.

கலைஞர்கள்

எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. வரவேண்டிய பணத் தொகைகளில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

மாணவ - மாணவியர்

கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. பொழுது போக்குகளாலும் கல்வியில் நாட்டம் குறையும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். மனக்குழப்பங்களும் நிம்மதிக் குறைவுகளும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். அலைச்சல், டென்சன் அதிகரிக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்

வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில்  கூடுதல் லாபம் பெற முடியும்.

உத்திரட்டாதி

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக  வேலைகளை செய்யாவிட்டால் மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

ரேவதி

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது. மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்

வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments