அமெரிக்காவில் அனுமதி மறுப்பு... நாடு திரும்பிய உலகக் கோப்பை நடுவருக்கு உற்சாக வரவேற்பு!
அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட உலகக் கோப்பை நடுவருக்கு சோமாலியாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதைப் பற்றி...
அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட உலகக் கோப்பை நடுவருக்கு சோமாலியாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிஃபா உலகக் கோப்பைத் தொடர் இந்தாண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில், 48 அணிகள் பங்கேற்று 16 நகர்களில் 104 போட்டிகள் நடைபெறுகின்றன. 23-வது கால்பந்து தொடர் நாளை (ஜூன் 11) தொடங்கி ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடரில் 12 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
அதில், 32 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். இந்த உலகக் கோப்பையில் புதியதாக 891 வீரர்களும் கடந்த உலகக் கோப்பையில் விளையாடியவர்கள் 357 பேரும் பங்கேற்றுள்ளனர்.
அவர்களில் நட்சத்திர வீரர்கள் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஓச்சோவா ஆகியோர் 6-வது உலகக் கோப்பையில் விளையாடவுள்ளனர்.
உலகக் கோப்பைக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் சூழலில், கால்பந்து போட்டியில் நடுவராகச் செயல்பட இருந்த சோமாலிய நடுவர் ஒமர் அப்துல்காதிர் அர்டன் தங்கள் நாட்டில் நுழைய அமெரிக்கா அனுமதி மறுத்தது. இதையடுத்து போட்டிக்கான நடுவர் பட்டியலிலிருந்து ஃபிஃபாவும் அவர் பெயரை நீக்கியது. இந்தச் சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகக் கோப்பை போட்டியில் பணியாற்றும் முதல் சோமாலிய நடுவராக சாதனை படைக்க இருந்தார் ஓமர் அர்டன். ஆப்பிரிக்க கண்டத்தில் சிறந்த கால்பந்து நடுவராக 2025 ஆம் ஆண்டில் தேர்வான அவர், 2 மாதங்களுக்கு முன்பே ஃபிஃபா வெளியிட்ட உலகக் கோப்பை போட்டிக்கான நடுவா் பட்டியலில் இருந்தார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 52 போட்டி நடுவர்களில் ஓமர் ஆர்டனும் ஒருவர். சோமாலியா நாட்டில் இருந்து உலகக் கோப்பையில் பணியாற்றப்போகும் முதல் நடுவர் என்ற பெருமையை பெறும் கனவோடு அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்துக்கு சென்றடைந்தார்.
போட்டிக்காக கடந்த வாரம் விசாவைப் பெற்ற அவர், கடந்த சனிக்கிழமை அமெரிக்கா வந்தபோது மியாமி விமான நிலையத்தில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கான உரிய காரணத்தை, அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் எந்தவொரு முன்னெடுப்பும் செய்யாத ஃபிஃபா, ஒமர் அர்டனை போட்டியிலிருந்து விடுவித்தது. எனினும், அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறுவதை தவிர்ப்பதற்காக டிரம்ப் நிர்வாகம் பயண கட்டுப்பாடுகள் விதித்த சில நாடுகளில் சோமாலியாவும் இருப்பதால் அவருக்கு தடைகள் விதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து சோமாலியா வந்த ஒமருக்கு தலைநகர் மொகடிஷு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமோக வரவேற்புக்குப் பின்னர் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசும்போது, “இறைவன் அருள் இருந்தால், அடுத்த உலகக்கோப்பைக்கு நான் நிச்சயம் வருவேன் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.