விராட் கோலி படம் | AP
கிரிக்கெட்

“சூப்பர் ஸ்டார் கலாசாரம்...” விராட் கோலியை சரமாரியாக விளாசும் முன்னாள் இந்திய வீரர்!

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியை இந்திய அணியின் முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

DIN

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியை இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக, மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், இவர்கள் இருவரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் கலாசாரம் ஒழிய வேண்டும்

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், விராட் கோலி உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதும் இல்லை, அவரது ஆட்டத்தில் உள்ள குறைகளை திருத்திக் கொண்டு விளையாடுவதும் இல்லை என இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சூப்பர் ஸ்டார் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும். சூப்பர் ஸ்டார் கலாசாரம் ஒழிந்து இந்திய அணி கலாசாரம் உருவாக வேண்டும். வீரர் ஒருவர் தனிப்பட்ட விதத்தில் தன்னை மேம்படுத்திக் கொண்டு, அணியின் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும். பார்டர் - கவாஸ்கர் தொடர் தொடங்குவற்கு முன்பு நிறைய போட்டிகள் இருந்தன. உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு மூத்த வீரர்களுக்கு இருந்தது. ஆனால், அவர்கள் விளையாடவில்லை. இந்த கலாசாரத்தை மாற்ற வேண்டும்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்ல்கர் ரஞ்சி கோப்பையில் விளையாடியிருக்கிறார். அவர் விளையாட வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமும் இல்லை. இருப்பினும், அவர் விளையாடினார். கடைசியாக விராட் கோலி எப்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி பத்தாண்டுகளுக்கும் மேலாகிறது.

டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிப்பது மிகவும் முக்கியம். 2024 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால், விராட் கோலியின் சராசரி 15. கடந்த 5 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், அவரது சராசரி 30 கூட கிடையாது. இந்திய அணியில் அவர் தொடர்ந்து இடம்பெற வேண்டுமா? அவருக்குப் பதிலாக இந்திய அணியில் இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பளிக்கலாம்.

விராட் கோலி இந்திய அணிக்காக நிறைய பங்களிப்புகளை வழங்கியுள்ளார். நிறையப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடி தந்துள்ளார். ஆனால், அவர் மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்து ஆட்டமிழக்கிறார். அவர் செய்யும் தவறுகளுக்கு இடையில் இடைவெளியே இல்லை. தொடர்ச்சியாக ஒரே தவறை செய்கிறார். பேட்டிங்கில் அவரது தவறை அவர் திருத்திக் கொள்ளவில்லை என்றார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடிய விராட் கோலி வெறும் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT