டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாதில் இன்று (அக்டோபர் 2) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
முதல் இன்னிங்ஸில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள், சாய் ஹோப் 26 ரன்கள், கேப்டன் ராஸ்டன் சேஸ் 24 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை முன்னாள் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் உடன் இணைந்து பும்ரா பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த சாதனையை இருவரும் 24 இன்னிங்ஸ்களில் படைத்துள்ளனர்.
பந்துகள் அடிப்படையில் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா தன்வசப்படுத்தியுள்ளார். அவர் 1747 பந்துகளில் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.