மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இருந்து கருண் நாயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது குறித்து அணித் தேர்வர் அஜித் அகர்கர் சூசகமாக பதிலளித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளனர். இந்தத் தொடர் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.
இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று (செப்.25) அறிவிக்கப்பட்டது. துபையில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில், அணித் தேர்வர் அஜித் அகர்கர் இருவரும் அணியை அறிவித்தனர்.
வழக்கம் போல கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணை கேப்டனான ரிஷப் பந்த் காயம் காரணமாக குணமாகாததால் அவருக்குப் பதிலாக அனுபவம் வாய்ந்த மூத்த வீரரும் ஆல்-ரவுண்டருமான ரவீந்திர ஜடேஜா இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
8 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த கருண் நாயர் அதிரடியாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கருண் நாயர் அதில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக 2016 ஆம் ஆண்டில் முச்சதம் விளாசியிருந்த கருண் நாயர் இந்தத் தொடரில் சரியாக சோபிக்காததது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் அதிருப்தி அடையவைத்தது.
இந்த நிலையில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அணித் தேர்வர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “வெளிப்படையாகச் சொல்லப்போனால், நாங்கள் அவரிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம். அவர் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.
அவருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம். நாங்கள் அனைவருக்குமே 15 முதல் 20 போட்டிகளில் வாய்ப்பு வழங்கவேண்டும் என நினைக்கிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது இப்போது ஒத்துவராது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேவ்தத் படிக்கல் இடம்பெற்றிருந்தார். தர்மசாலாவில் நடைபெற்ற இங்கிலாந்து எதிரான போட்டியிலும் அரைசதம் அடித்திருந்தார். அவர் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.