இந்திய அணியில் ரோஹித், கோலி தொடர்ந்து விளையாடுவார்களா? கபில் தேவ் கொடுத்த அருமையான பதில்!
இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடர்ந்து இடம்பெறுவார்களா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் பேசியுள்ளார்.
இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடர்ந்து இடம்பெறுவார்களா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் பேசியுள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருவரும் விளையாடி வருகின்றனர். முதல் இரண்டு போட்டிகளில் ரோஹித் சர்மா 11 ரன்கள் மற்றும் 26 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 5 ரன்கள் மற்றும் 65 ரன்கள் எடுத்தார். ரோஹித் சர்மாவின் ஆட்டம் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. இதற்கிடையில், அவர் ஓய்வு பெறப் போகிறார் என்ற தகவலும் பரவியது. பின்னர், அது தவறான தகவல் என்பது பிசிசிஐ தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நட்சத்திர வீரர்கள் என்பதால் மட்டுமே ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் எனக் கூறமுடியாது எனவும், அவர்கள் நன்றாக விளையாடும் வரை அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியில் கண்டிப்பாக இந்த வீரருக்கு இடம் கிடைக்கும் என்பதை எந்தவொரு வீரருக்கும் உறுதிபடக் கூற முடியாது. யாரெல்லாம் நன்றாக விளையாடுகிறார்களோ அவர்கள் தொடர்ச்சியாக அணியில் இடம்பிடிப்பார்கள். அந்த வீரர்கள் யாராக இருந்தாலும் சரி. வீரர்கள் விளையாடுவதை தொடர்ந்து கவனியுங்கள். சச்சின் டெண்டுல்கர் ஓய்வுபெறும்போது கூட அவரிடம் கிரிக்கெட் விளையாடுவதற்கான திறன் இருந்தது.
வீரர்களைத் தேர்வு செய்யும் வேலையை தேர்வுக்குழு உறுப்பினர்கள் பார்த்துக் கொள்ளட்டும். அணியிலிருந்து யாரை நீக்க வேண்டும் என நான் கூறப்போவதில்லை. அது தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அணி நிர்வாகத்தின் வேலை. சரியான அணியைத் தேர்வு செய்வதற்கான பொறுப்பு அணி நிர்வாகத்துக்கு உள்ளது. அணி நிர்வாகம் சிறந்த அணியைத் தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் தேர்வு செய்த அணித் தோல்வியைத் தழுவும்போது, நாம் அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
ரோஹித் சர்மாவுக்கு 20 வயது கிடையாது. அவர் கிட்டத்தட்ட 40 வயதை நெருங்கிவிட்டார். ஒவ்வொரு வீரரும் ஓய்வு பெற்றுதான் ஆக வேண்டும். ஆனால், அவர் இந்தியர்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள ரசிகர்களுக்கும் கொடுத்திருக்கும் மகிழ்ச்சி மிகப் பெரியது. இத்தனை ஆண்டுகளாக ரோஹித் சர்மா அணிக்காக செய்துள்ள சாதனைகளை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். அவரால் தொடர்ந்து நன்றாக விளையாட முடியும் என தேர்வுக்குழு மற்றும் அணியின் கேப்டன் நினைத்தால், அவரைத் தொடர்ந்து விளையாட வைக்கலாம் என்றார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மாவுக்கு 39 வயது மற்றும் விராட் கோலிக்கு 37 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
Former Indian captain Kapil Dev has spoken about whether Rohit Sharma and Virat Kohli will continue to be part of the Indian team.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.