பும்ராவின் முதல் ஓவரை அடித்து என் மீதான அழுத்தத்தை சூர்யவன்ஷி நீக்கினார்: ஜெய்ஸ்வால்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் சூர்யவன்ஷி குறித்து...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் பேசும்போது, “பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே ரன்களைக் குவித்து அழுத்தத்தை நீக்கிவிட்டார் சூர்யவன்ஷி” எனப் புகழ்ந்து பேசியுள்ளார்.
நேற்றிரவு மும்பைக்கும் ராஜஸ்தானுக்கும் நடந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால், போட்டி 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ஓவர்களில் 150/3 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 77 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய மும்பை அணி 11 ஓவர்களில் 123/9 ரன்கள் எடுத்தது.
Advertisement
பிகாரைச் சேர்ந்த 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி ரூ.1.1 கோடிக்கு 2025 ஏலத்தில் ராஜஸ்தான் அணிக்கு வாங்கப்பட்டார். 35 பந்தில் சதம் அடித்து வரலாறு படைத்தார்.
இந்தப் போட்டியில் சூர்யவன்ஷி 14 பந்துகளில் 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பும்ரா வீசிய ஓவரில் முதல் பந்திலும் மூன்றாவது பந்திலும் சிக்ஸர் அடித்து மிரட்டினார். இது குறித்து ஜெய்ஸ்வால் கூறியதாவது:
முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த சூர்யவன்ஷியிடம், ‘ நீ உனது ஷாட்டுகளை விளையாடு’ என்றேன். பும்ரா நிச்சயமாக ஒரு லெஜெண்ட். அவருக்கு எதிராக ரன்கள் குவிப்பது அற்புதமானது. மேலும், பும்ரா ஓவரையே அடித்துவிட்டால், மற்றவர்கள் ஓவரை எளிதாக அடிக்க முடியும் என உணர்வைத் தந்தது.
சூர்யவன்ஷியால் எனக்கு அழுத்தம் குறைந்தது. நான் மற்றவர்களின் ஓவர்களை அடிக்க முடிவெடுத்தேன். எங்களுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது. நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம்.
நாங்கள் இருவருமே எங்களுக்கு வருகின்றன் ஷாட்டுகளை நன்றாக விளையாடினோம். இருவருக்கும் நேர்மறையான செய்திகளை பகிர்ந்துகொள்கிறோம். சில ஆண்டுகளாக விளையாடுவதால், சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுகிறேன் என்றார்.