டேவிட் மில்லர் ஒரு கிறுக்கன்: அஸ்வின்
டேவிட் மில்லரை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர் அஸ்வின் குறித்து...
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆடத்தில் டேவிட் மில்லர் செய்த செயலை முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின், ”மில்லர் ஒரு கிறுக்கன்” என கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் போட்டியின் 14-ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வென்றது. இந்தப் போட்டியில் 19.5ஆவது பந்தில் 1 ரன் எடுக்கும் வாய்ப்பு இருந்தும் டேவிட் மில்லர் நிராகரித்து, கடைசி பந்தில் ஆட்டமிழந்தது மிகுந்த விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
சமூக வலைதளங்களில் பலரும் டேவிட் மில்லருக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், முன்னாள் வீரர் அஸ்வின் கூறியிருப்பதாவது:
Advertisement
டேவிட் மில்லர் என்ன செய்தார் என்பதை சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நான் குல்தீப்பாக இருந்தால், எப்படியாவது அந்த ரன்னை ஓடியிருக்கும்படி செய்திருப்பேன். டேவிட் மில்லர் ஏன் ஓடவில்லை என எனக்குப் புரியவே இல்லை. இப்படியெல்லாம் கிறுக்கர்கள்தான் செய்வார்கள்.
கடைசி பந்தில் சிக்ஸ்ரோ அல்லது பவுண்டரி தேவை என்றாலோ அப்படி செய்யலாம். அதில், பகுத்தறிவு இருக்கிறது எனலாம். ஆனால், 2 ரன்கள் தேவையானபோது ஏன் ஓடவில்லை? குல்தீப் அடிக்காவிட்டாலும் ஆட்டம் டிரா ஆகி சூப்பர் ஓவருக்குச் சென்றிருக்குமே?
தில்லி அணி நன்றாகத்தானே விளையாடி இருக்கிறது. சூப்பர் ஓவர் சென்றிருக்கலாமே? நான் ஏற்கெனவே சொன்னதுபோல, தில்லி அணிதான் தொடரிலிருந்து வெளியே செல்வதற்காக எதாவது சொதப்பலாக செய்ய வேண்டும். மற்றபடி நல்ல அணியாக இருக்கிறது.
இப்படியான தோல்விகளைச் சந்தித்தால் இரண்டு விஷயங்கள் நடக்கும். ஒன்று - அணியின் நம்பிக்கை சிதையும். இரண்டு - குஜராத் போன்ற அணிகளை மீண்டும் தொடருக்குள் நுழைய அனுமதி செய்வது போலாகிவிடும். இந்தப் போட்டியில் குஜராத் தோற்றிருந்தால் கடினமான சூழ்நிலைக்குச் சென்றிருபார்கள்.
தற்போது, குஜராத் அணிக்கு ஒரு வாழ்க்கை அளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் (தில்லி) 4 புள்ளிகளில் அப்படியே இருக்க வேண்டியதுதான் எனக் காட்டமாக தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.