பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் வங்கதேசத்துக்கு ஆதரவாக, டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாகக் கூறியுள்ளார்.
வங்கதேசத்துக்கு மாற்றாக ஸ்காட்லாந்து அணியை டி20 உலகக் கோப்பையில் இணைத்த ஐசிசியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
என்ன பிரச்னை?
டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் பிப்.7ஆம் தேதி முதல் இந்தியா, இலங்கையில் நடைபெறவிருக்கின்றன. முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வங்கதேசத்தில் இந்துக்கள் கொலை செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து, காரணம் கூறாமல் ஐபிஎல் தொடரில் இருந்து முஷ்தஃபிகுர் ரஹ்மான் நீக்கப்பட்டார். இதன் எதிரொலியாக, வங்கதேச அணி டி20 உலகக் கோப்பையில் விளையாட இந்தியாவுக்கு வர மறுத்தது.
இலங்கையில் விளையாட ஐசிசியிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், ஐசிசி மறுத்து அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்தை உலகக் கோப்பையில் சேர்த்தது.
இந்த விவாகரத்தில் பாகிஸ்தான் என்ன நிலைப்பாடு எடுக்குமென்று உலகமே எதிர்பார்த்து வந்தது. தொடக்கத்தில் உலகக் கோப்பையைப் புறக்கணிக்கும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டுமே புறக்கணித்துள்ளது.
வங்கதேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான்
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கூறியதாவது:
டி20 உலகக் கோப்பையில் மிகவும் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். அது என்னவென்றால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம். ஏனெனில் களத்தில் எந்த விதமான அரசியலும் இருக்க வேண்டாம் என நினைக்கிறோம்.
நாங்கள் முழுமையாக வங்கதேசத்துக்கு ஆதரவாக நிற்கிறோம். இதுதான் சரியான முடிவு என்றும் நினைக்கிறோம். நாங்கள் வங்கதேசத்துடன் நிற்கிறோம் எனக் கூறியுள்ளார்.
அயர்லாந்து உடனான பாகிஸ்தானின் பயிற்சி ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என வென்ற பாகிஸ்தான் நல்ல ஃபார்மில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.