டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை பாகிஸ்தான் அணி வீரர் ஃபஹீம் அஷ்ரஃப் வென்றுள்ளார்.
பாகிஸ்தான் கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் த்ரில் வெற்றி
கொழும்புவில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நெதர்லாந்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி, 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
பாகிஸ்தான் அணி 98/3-லிருந்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. 114 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஃபஹீம் அஷ்ரஃப் 11 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
ஆட்ட நாயகன் விருது வென்ற ஃபஹீம் அஷ்ரஃப் கூறியிருப்பதாவது:
என்ன நினைத்தோமோ அதுவே நடந்தது
கடந்த ஓராண்டாக இதே மாதிரியான கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறோம். அதனால், எந்த வேலையைக் கொடுத்தாலும் அதைச் சிறப்பாக செய்து முடிக்க்க முயற்சிப்போம்.
இதயத் துடிப்பு அதிகரித்தது. இது போன்ற நிலை எங்களுக்கு முதல்முறையும் அல்ல; புதிதும் அல்ல. அதனால், களத்துக்குச் சென்று எங்களுக்குத் தெரிந்ததைச் செய்கிறோம்.
விக்கெட் கொடுக்கக் கூடாது என்று பேசிக்கொண்டு விளையாடினோம். ஒரு பவுண்டரி அல்லது இரு சிக்ஸர் அடித்தால் இலக்குக்கு அருகில் செல்லுவோம். அதனால், அந்த நேரத்தில் ஒரு ஓவரில் மட்டுமே கவனம் செலுத்தினோம். கடவுளுக்கு நன்றி. நாங்கள் என்ன நினைத்தோமோ அதுவே நடந்தது.
பந்து காற்றில் இருக்கும்போது எதிரணியினர் பந்தை விடவேண்டும் என வேண்டினேன். விரைவாக ஆட்டத்தை முடிக்க நினைத்தோம். ஆனால், சில நேரங்களில் இப்படியாகும். இந்த மாதிரியான சூழ்நிலைகளில், நாம் நமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். சரியாக விளையாடாதபோதும் எங்கள் அணியினர் அப்படித்தான் இருந்தார்கள். அதனால்தான் நாங்கள் வெற்றியடைந்தோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.