இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் தருவேன்..! ப்ரித்வி ஷா நம்பிக்கை!
தில்லி கேபிடல்ஸ் அணியின் பேட்டர் ப்ரித்வி ஷா பேட்டி குறித்து...
தில்லி கேபிடல்ஸ் அணியின் பேட்டர் ப்ரித்வி ஷா தான் அளித்த பேட்டியில், “இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் தருவேன் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை” எனக் கூறியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த ப்ரித்வி ஷா ( 26 வயது) ஐபிஎல் அணியில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டிகள் மார்ச் 28 முதல் தொடங்குகின்றன.
ப்ரித்வி ஷா இந்திய அணியில் கடந்த 2021ல் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். பின்னர், 2023, 24 ஐபிஎல் சீசன்களில் மிகவும் மோசமாக விளையாடினார். உடல் எடை அதிகரித்த அவர் மீண்டும் தனது ஃபிட்னஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த 2025 சீசனில் ஏலத்தில் விலைபோகாத ப்ரித்வி ஷா 2026ல் தில்லி கேபிடல்ஸ் அணி அடிப்படை விலை ரூ.75 லட்சத்துக்கு எடுத்தது. இந்நிலையில் ப்ரித்வி ஷா கூறியிருப்பதாவது:
இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் தருவேன் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதனால்தான், நான் இங்கு விளையாடுகிறேன். அதற்காகத்தான் கடினமாக உழைத்து வருகிறேன். வழக்கமாக உழைப்பதை விட மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறேன். கம்பேக் அளிக்க எனது 100 சதவிகித உழைப்பை அல்ல, 200 சதவிகித உழைப்பை அளிக்கிறேன்.
எனக்கு மனம் சரியில்லை என்றால் பயிற்சி செய்ய மாட்டேன். 50 சதவிகித மனதுடன் பயிற்சி செய்தால் எதுவும் நடக்காது. களத்தில் 100 சதவிகிதம் தரவில்லை எனில் களத்துக்கே வரக்கூடாது.
வாழ்க்கையில் எவ்வளவு ஏற்ற இறக்கங்கள் நடந்தாலும் அதை புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்கிறேன். வளரும்போதுதான் நமது தவறுகள் நமக்கே தெரிய வரும். உங்களுக்குத் தெரிந்ததைக் கூற ஆலோசகரோ அல்லது மூத்த வீரரோ தேவையில்லை. முன்னதாகவே உங்களுக்கு தெரிந்துவிட்டால், அதைப் புரிந்துகொண்டு கடந்துவிடுங்கள் என்றார்.
தில்லி அணி தனது முதல் போட்டியில் ஏப்.1ஆம் தேதி எல்எஸ்ஜி அணியுடன் மோதுகிறது