வைபவ் சூர்யவன்ஷியை கண் திருஷ்டியிலிருந்து காப்பாற்றுங்கள்! - ரவி அஸ்வின்
வைபவ் சூர்யவன்ஷியை கண் திருஷ்டியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளதைப் பற்றி...
வைபவ் சூர்யவன்ஷியை கண் திருஷ்டியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம், நியூ சண்டீகர் முல்லான்பூரில் நேற்றிரவு (மே. 27) நடைபெற்ற வெளியேற்றுதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 243/8 ரன்கள் எடுக்க, இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், ராஜன்ஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் குவாலிஃபையர் 2 சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, ஹைதராபாத் அணி வீரர்களின் பந்து வீச்சைச் சிதறடித்தார்.
Advertisement
Advertisement
8 சிக்ஸர்களுடன் அரைசதத்தைக் கடந்த அவர், அதிவேக சதமடித்து உலகச்சாதனை புத்தகத்தில் இடம்பெறுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 5 பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள் அடித்து நேற்றைய போட்டியில் அனைத்து விருதுகளையும் வென்றார்.
கடந்தாண்டு 14 வயதில் அறிமுகமான சூர்யவன்ஷி, 7 போட்டிகளில் விளையாடி, 225 ரன்கள் குவித்திருந்தார். அதேபோலவே இந்தாண்டும் அதிரடியைத் தொடர்ந்து சூர்யவன்ஷி 15 போட்டிகளில் 680 ரன்களைக் குவித்திருக்கிறார்.
சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்துக்கு முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ஏபிடி வில்லியர்ஸ் உள்பட பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், அதிரடியாக விளையாடும் சூர்யவன்ஷியை கண் திருஷ்டியிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று நகைச்சுவையாகவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ரவி அஸ்வின் தனது யூடியூப் விடியோவில் பேசுகையில், “15 வயதான சிறுவனைப் போல விளையாட வேண்டுமில்லை. இந்த அளவிலான தெளிவான ஆட்டத்தில் விளையாடுவதற்கு அவர் 15 வயதில் எத்தனை போட்டிகளில் விளையாடியிடுப்பார் என்று சொல்லுங்கள்.
தேர்ட் மேன் பகுதிக்கு மேல் அவர் அடித்த அப்பர்கட் மூலம் சிக்ஸர் அடித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த சீசனின் தொடக்கத்தில் அதே பந்தைத்தான் அவன் நேராக அடிக்க முயன்றான். அவன் ஒரு சாதாரண வீரர் அல்ல. அவனது பெற்றோர் அவனைக் கண் திருஷ்டியிலிருந்து காப்பாற்ற வேண்டும்” என்றார்.