ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறியது குறித்து அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, நடப்பு ஐபிஎல் தொடர் சிறப்பானதாக அமையவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே, வெறும் 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்தும் சிஎஸ்கே வெளியேறியது.
மைக்கேல் ஹஸ்ஸி கூறுவதென்ன?
பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து வெளியேறியது குறித்து கண்டிப்பாக அச்சமடையப் போவதில்லை என சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியிலிருந்து வெளியேறியது குறித்து கண்டிப்பாக நாங்கள் அச்சமடையப் போவதில்லை. இந்த சீசன் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளோம் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் அதிக போட்டிகளில் வெற்றி பெறவில்லை. எங்களுக்கு போட்டியை வென்று கொடுக்கும் சில வீரர்கள் கிடைத்துள்ளார்கள். எந்த ஒரு அணிக்கு எதிராகவும் சவாலளிக்கும் விதமாக எங்களால் விளையாட முடியும்.
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு சில வீரர்களுக்கு இந்த சீசனில் கிடைத்துள்ளது. இது அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. அவர்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பினை விடாப்பிடியாக நன்றாக பிடித்துக் கொண்டு அடுத்து சில சீசன்களில் சிஎஸ்கே அணியின் பிரதான வீரர்களாக அவர்கள் மாறுவார்கள் என நம்புகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.