ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய முகமது ஷமி!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து முகமது ஷமி விலகியுள்ளார்.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக முகமது ஷமி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதன்பின் காயம் காரணமாக இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் முகமது ஷமி இடம்பெறவில்லை.
இந்த நிலையில், காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து முகமது ஷமி விலகியுள்ளதாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
Advertisement
இது தொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக ஜனவரி கடைசி வாரத்தில் லண்டன் சென்றார். அங்கு கணுக்கால் காயத்துக்காக ஊசிப் போட்டுக்கொண்டார். பின்னர், மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இருப்பினும், ஊசிப் போட்டுக் கொண்டது பலனளிக்காததால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால், அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமது ஷமி ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.