இப்போதும் கார்ல்சென்தான் சிறந்தவர்: பிரக்ஞானந்தா
உலகின் நம்.1 வீரர் மாக்னஸ் கார்ல்செனை வீழ்த்திய பிறகு பிரக்ஞானந்தா அளித்த பேட்டி குறித்து...
நார்வே செஸ் போட்டியில் ஒரே வாரத்தில் இரண்டு முறை உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்செனை கிளாசிக்கல் கேமில் தமிழக வீரர் ஆர். பிரக்ஞானந்தா வீழ்த்தி வரலாறு படைத்துள்ளார்.
கார்ல்செனை முன்னதாக 3ஆவது சுற்றில் வீழ்த்திய பிரக்ஞானந்தா தற்போது 8ஆவது சுற்றிலும் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கார்ல்செனை எந்த வடிவிலான ஆட்டத்தில் வென்றாலும் சிறப்பானதே. ஆனால், அதையெல்லாம் விட தொடரின் இந்தக் கட்டத்தில் பெற்ற வெற்றி முக்கியமானது. கிளாசிக்கல் கேமில் வென்றால் 3 புள்ளிகள் கிடைத்துள்ளது.
Advertisement
Advertisement
கார்ல்செனுடன் விளையாடுவது அச்சுறுத்தலாக உணர்வதில்லை. எப்போதுமே அவருடன் விளையாடுவது ஆர்வமாகவே இருக்கும். அதுதான் எனது சிறந்த விளையாட்டைக் கொண்டு வருகிறது. அவர் இருப்பதால் எனது விளையாட்டு பாதிக்கப்படுவதில்லை. நிறைய முறை சிறப்பான விளையாட்டை விளையாடியிருக்கிறோம். அதனால். அவருடனான ஆட்டம் எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும்.
இன்று நான் அதிகமான ரிஸ்க் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. சூழ்நிலை சண்டையிட வைத்தது. மாக்னஸும் முயன்றார். ஒருவரையொருவர் வீழ்த்த நினைத்ததால், புதியதாக விளையாட வேண்டியிருந்தது.
ஒரு கட்டத்தில் நான் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், இறுதியில் டிராவில் முடியுமென நினைத்தேன். அப்போதுதான் அவர் ஒரு தவறு செய்தார். நீண்ட நேரமாக தடுப்பாட்டம் ஆடுவதாலும் நேரமின்மையாலும் சில நேரங்களில் இப்படி நடக்கும்.
கார்ல்சென் ஆதிக்கம் முடிவடைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. கடந்தாண்டு விளையாடிய அனைத்தையும் அவர் வென்றுள்ளார். ஒரு தொடர், சில தருணங்கள் அவரை மாற்ற முடியாது. அவர்தான் இப்போதும் சிறந்தவர் என்றார்.