ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கப் போவது யார்?: தீபக், தீபாவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கப் போவது யார்? என்பது தொடர்பாக, ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபக் மற்றும் தீபாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கப் போவது யார்? என்பது தொடர்பாக, ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபக் மற்றும் தீபாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகம், மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் உள்ள, ரூ.913 கோடி மதிப்புள்ள அவரது சொத்துக்களை நிர்வகிக்க குழு ஒன்றை அமைக்கக் கோரி, கர்நாடக மாநில அதிமுக செயலராக இருந்த புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி கார்த்திகேயன், ஜெயலலிதாவுக்கு ரத்த சம்பந்தமுள்ள உறவுகளாக அவரது அண்ணன் வாரிசுகளான தீபக் மற்றும் தீபா இருப்பதால், இந்த மனுவுக்கு அவசியம் இல்லை என்று தள்ளுபடி செய்தார்.
Advertisement
இந்த தீர்ப்பை எதிர்த்து புகழேந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்து. இந்த மனுவானது நீதிபதி கிருபாகரன் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் உள்ள, ரூ.913 கோடி மதிப்புள்ள அவரது சொத்துக்கள் பட்டியலிடப்பட்டுள்ளதால், அவற்றை கண்காணிப்பது கஷ்டமான காரியமல்ல. எனவே ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கப் போவது யார்? ஏதேனும் திட்டம் உள்ளதா? அல்லது நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் ஒரு குழுவை நியமக்கலாமா? என்பது குறித்து நானகு வாரங்களுக்குள் பதில் அளிக்க, தீபக் மற்றும் தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.