கம்பம்: தென்மேற்கு மலைத்தொடரில் பெய்து வரும் மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
முல்லைப்பெரியாறு அணையில் கடும் கோடையாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் சரிந்தும், நீர்வரத்து குறைந்தும் இருந்தது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஏப்ரல் 9 முதல் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து ஏற்பட்டது. நீர்வரத்து வினாடிக்கு 350 கன அடியாக இருந்தது.
இதையும் படிக்க.. கரோனா நோயாளிகள் இல்லாத முதல்நாள்: ராஜீவ் காந்தி மருத்துவமனை சாதனை
ஏப்.10ஆம் தேதி விநாடிக்கு 850 கன அடியாக அதிகரித்து வந்தது. அதனை தொடர்ந்து மழை பெய்வதால் செவ்வாய்க்கிழமை வினாடிக்கு, 1,975 கன அடியாக வந்தது. இதன்படி, ஒரே நாளில் நீர்வரத்து 1,125 கன அடி தண்ணீர் அதிகமாக வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அணை நிலவரம்
செவ்வாய்க்கிழமை பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.50 அடி உயரமாகவும் (மொத்த உயரம் 142), நீர் இருப்பு 3,942 கன அடியாகவும் அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 1,975 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் விநாடிக்கு 100 கன அடியாகவும் இருந்தது. பெரியாறு அணைப்பகுதியில் 35.0 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 44.60 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.