தரங்கம்பாடிக்கு சீகன்பால்க் வந்து இறங்கிய 317 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடிக்கு சீகன்பால்க் வருகை தந்ததன் 317ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பேராயர் ஏ. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிருஸ்துவ மதத்தைப் பரப்பும் வகையில் சீகன்பால்கு டென்மார்க் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு கி.பி. 1706-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி தரங்கம்பாடி வந்து சேர்ந்தார். தமிழ் மொழியை கற்றுக்கொண்டு எழுதவும், படிக்கவும், சரளமாகத் தமிழில் பேசவும் செய்தார். 1715-ம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து அச்சு இயந்திரம் கொண்டு வந்து, தரங்கம்பாடி அருகே உள்ள பொறையாரில் கடுதாசிப் பட்டரையில் அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் தொழிற்சாலை, பித்தளை மற்றும் ஈயம் போன்ற உலோகங்களால் தமிழ் எழுத்துக்கள் தயாரிக்கும் கூடத்தை அமைத்தார்.
இவற்றின் மூலம் சீகன்பால்குவே இந்தியாவில் முதன்முதலாக தமிழ் மொழியில் பைபிளை (புதிய ஏற்பாடு) காகிதத்தில் அச்சடித்து நூலாக வெளியிட்டார். அதன்பின், தமிழ் நூல்களான திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு, ஆத்திச்சூடி போன்ற எண்ணற்ற நூல்களை ஓலைச்சுவடியில் இருந்து, காகிதத்தில் அச்சடித்து புத்தகமாக வெளியிட்டார்.
தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி, இந்து சமயக் கடவுள்களின் வரலாறு போன்ற நூல்களையும் படைத்திருக்கிறார். இன்று உலகின் பல்வேறு நாடுகளில் தமிழ்மொழி அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருப்பதற்கு சீகன்பால்கு காரணம் ஆவார்.
ஜெர்மனியில் உள்ள 'ஹால்வே' பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையை நிறுவுவதற்கும் இவர் பெரும் பங்காற்றியிருக்கிறார். தமிழர்களுக்கு கல்விக் கூடங்கள் அமைத்து இந்தியாவில் பெண்களுக்கென தனியாக முதல் பள்ளிக்கூடத்தை தொடங்கினார். ஆசியாவிலேயே முதல் தேவாலயமான புதிய எருசேலம் ஆலயத்தை தரங்கம்பாடியில் 1718-இல் அமைத்திருக்கிறார். 1719-இல் உயிரிழந்தார்.
சீகன்பால்குவின் உடல், தரங்கம்பாடி புதிய எருசேலம் ஆலயத்தின் பலிபீடம் முன்பு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தரங்கம்பாடிக்கு சீகன்பால்க் வந்து இறங்கிய 317 வது நினைவு தினத்தையொட்டி இன்று புதிய எருசலேம் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும், அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மலர் தூவி, மாலைகள் அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.
இதையும் படிக்க: கேரளத்தில் தொடரும் கனமழை: 19 பேர் உயிரிழப்பு; 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்கவைப்பு!
இந்நிகழ்வில் தரங்கை பேராயர் ஏ. கிறிஸ்டியன் சாம்ராஜ் கலந்துகொண்டு சீகன்பால்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தரங்கம்பாடி புது எருசலேம் ஆலயம் சபைகுரு சாம்சன் மோசஸ், தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன், கல்லூரி முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார், பிஷப் ஜான்சன், மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜான் சைமன், சபைகுருமார்கள் உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.