முகப்பு
தமிழ்நாடு

சட்டைநாதர்சுவாமி கோயில் கும்பாபிஷேகம்: ஹெலிகாப்டர் மூலம் மலர், புனித நீர் தெளிப்பு!

சீர்காழியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு  நடைபெற்ற  சட்டைநாதர்சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Updated On : 24 மே, 2023 at 10:55 AM
பகிர்:

சீர்காழியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு  நடைபெற்ற  சட்டைநாதர்சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். மலைமீது தோணியப்பர் - உமாமகேஸ்வரி அம்மன், சட்டைநாதர் ஆகிய சுவாமிகள் 3 நிலைகளில் காட்சி தருகின்றனர். திருஞானசம்பந்தர் பெருமானுக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய அற்புத ஸ்தலமாகும். காசிக்கு அடுத்தப்படியாக  அஷ்ட பைரவர்கள் இக்கோயிலில் தெற்குகோபுரம் அருகே தனி சன்னதியில் காட்சி தருகின்றனர். பிரசித்திப்பெற்ற இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்திட தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முடிவு செய்து அதற்கான திருப்பணிகள் தொடங்கி ரூ.20 கோடி செலவில் நடைபெற்று வந்தது.

முத்துசட்டைநாதர்சுவாமி, திருஞானசம்பந்தருக்கு கருங்கல் மண்டபம், கருங்கல் பிரகாரங்கள், மேள்தளம் புதுப்பித்தல், வர்ணபூச்சு என திருப்பணிகள் சிறப்பாக நடந்து முடிந்து கடந்த சனிக்கிழமை 8 கால யாகசாலை பூஜைகள்  11 பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்துமுடிந்தது.

Advertisement

இன்று நான்கு கோபுரங்கள், சுவாமி அம்மன் விமான கலசங்கள், மலைக்கோயில் விமான கலசம் உள்ளிட்டவைகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம்  முன்னிலையில் நடைபெற்ற  கும்பாபிஷேகத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பல்வேறு மடத்து ஆதீனங்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆதிகேசவலு, செளந்தரராஜன், அரசு உயர்அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது. மேலும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மயிலாடுதுறை எஸ்பி உஷா தலைமையில் பல்வேறு மாவட்ட எஸ்பிக்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.