முகப்பு
தமிழ்நாடு

கையின் கட்டைவிரலானது கால் விரல்: மருத்துவர்கள் சாதனை

விபத்தில் காயமடைந்து, கையின் கட்டை விரலை இழந்த 32 வயது கூலித் தொழிலாளியின் கால் விரலை எடுத்து, கட்டை விரலாகப் பொருத்தி சென்னை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Updated On : 18 ஆகஸ்ட், 2023 at 4:31 PM
பகிர்:


சென்னை: விபத்தில் காயமடைந்து, கையின் கட்டை விரலை இழந்த 32 வயது கூலித் தொழிலாளியின் கால் விரலை எடுத்து, கட்டை விரலாகப் பொருத்தி சென்னை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கையில் ஆள்காட்டி மற்றும் கட்டை விரலில் அடிபட்டு தொழிலாளி போரூரில் உள்ள ஸ்ரீராமசந்திரா மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

கையின் முக்கியமான இரண்டு விரல்களும் கடும் சேதமடைந்ததால், அவரது கைவிரல்களை மீள் கட்டமைக்க வேண்டிய, மருத்துவமனை அறுவைசிகிச்சை நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகளை செய்து, கால் விரலை எடுத்து கை கட்டைவிரலாகப் பொருத்த முடிவு செய்தனர்.

Advertisement

கட்டைவிரல் இருந்தால்தான், ஒரு கையின் 70 சதவீத இயக்கும் இருக்கும் என்பதால், மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை செய்வதென்று முடிவு செய்தனர்.
அதாவது, காலில் இருந்து ஒரு விரல், அப்படியே ரத்த நாளங்கள், நரும்புகள், எலும்புப் பகுதியோடு உருவு எடுக்கப்பட்டு, அது அப்படியே கையின் கட்டை விரல் இருந்த பகுதிக்குள் வைக்கப்பட்டு, ரத்த நாளங்கள், நரம்புகள், எலும்புகள் என அனைத்தையும் ஒன்றிணைக்க வேண்டும். இது மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சை. கால் விரலில் ஒன்றை அகற்றிவிட்டு, அவர் நடப்பதற்கும் சிரமம் இல்லாமல், காலையும், அகற்றிய நரம்புகளை தையல் போட்டு ரத்த ஓட்டத்தை நிறுத்தவும் என பல பணிகள் இருந்தன.

ஒரு சின்ன தவறு நேர்ந்தாலும் முழு சிகிச்சையும் தோல்வியில் முடிந்துவிடும் என்பதால் மிகவும் கவனமாக செயல்பட்டனர்.

மேலும், புதிதாகப் பொருத்தம் இடத்தில் கால் விரலுக்கு ரத்த ஓட்டம் சீரடைய வேண்டும். இல்லையென்றால் அது அழுகிவிடும் அபாயமும் உள்ளது. ஆனால், நல்லபடியாக, கையில் பொருத்தப்பட்ட கால் விரலுக்கு ரத்தம் பாய்ந்து, இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது.

தற்போது அவரது கையில் பொருத்தப்பட்ட கால்விரலை அசைத்து பயிற்சிகள் எடுத்து வருகிறார். விபத்து நடந்து சுமார் 8 வாரங்களுக்குப் பிறகு இந்த அறுவைசிகிச்சை நடந்துள்ளது. 

நாள்தோறும் தொழிற்சாலைகளில் பல தொழிலாளிகள் காயமடைகிறார்கள். விரல்களை, கை, கால்களை இழக்கிறார்கள். உடனடியாக அவர்கள் துண்டான உடல் பாகத்தை மிகச் சரியாக பதப்படுத்தி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு வந்தால் நிச்சயம் அதனை சரி செய்ய முடியும். தற்போத சீரமைப்பு பணிகள் அதிக வெற்றியை பெறுகின்றன.

துண்டிக்கப்பட்ட உடல் பாகத்தை உடனடியாக நல்ல தண்ணீரில் கழுவி, ஒரு சுத்தமாக பிளாஸ்டிக் கவரில் போட்டு, ஒரு பெட்டியில் ஐஸ் கட்டிகளை நிரப்பி அதில் இந்த கவரைப் போட்டுக் கொண்டு வர வேண்டும். உடல் பாகத்தை அப்படியே ஐஸ்கட்டியில் போட்டு வைக்கக் கூடாது என்று மருத்துவர்கள் வலியுறுத்திவருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.