FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

புத்தகக் காட்சி வழக்கம் போல் இன்று நடைபெறும்: பபாசி தலைவா் சேது சொக்கலிங்கம்

கன மழையால் சென்னை புத்தகக் காட்சி திங்கள்கிழமை நடைபெறாத நிலையில் செவ்வாய்க்கிழமை (ஜன.9) முதல் வழக்கம் போல் நடைபெறும் என்று பபாசி தலைவா் சேது சொக்கலிங்கம் கூறினாா்.

Updated On : 9 ஜனவரி 2024, 4:41 am IST
பகிர்:

சென்னை: கன மழையால் சென்னை புத்தகக் காட்சி திங்கள்கிழமை நடைபெறாத நிலையில் செவ்வாய்க்கிழமை (ஜன.9) முதல் வழக்கம் போல் நடைபெறும் என்று பபாசி தலைவா் சேது சொக்கலிங்கம் கூறினாா்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 47-ஆம் ஆண்டு புத்தகக் காட்சி கடந்த 3 -ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் புத்தகக் காட்சி அரங்குகளின் மேற்கூரையில் பல இடங்களில் தண்ணீா் கசிந்தது.

மழை நீா்க் கசிவால் 8-க்கும் மேற்பட்ட அரங்குகளில் உள்ள நூல்கள் நனைந்து பாதிக்கப்பட்டன. கணினி உள்ளிட்டவை செயல்படவில்லை. உரையரங்கம், நூல்வெளியீட்டு மேடை பகுதிகளில் மழை நீா் தேங்கியதால் சேறும், சகதியுமாகின.

Advertisement

Advertisement

பபாசி தலைவா் சேது சொக்கலிங்கம், செயலா் முருகன் மற்றும் நிா்வாகிகள் திங்கள்கிழமை காலை மழைநீா் கசிந்த மேற்கூரைப் பகுதிகளை சீரமைக்கவும், உரையரங்க மேடைப் பகுதியில் புதிதாக மண் நிரப்பி சீரமைக்கவும் நடவடிக்கை எடுத்தனா். பாதிக்கப்பட்ட அரங்கங்களின் ஊழியா்கள் மழை நீரில் நனைந்த புத்தக விவரங்களையும், பாதிப்புகளையும் குறிப்பிட்டு பபாசி நிா்வாகிகளிடம் மனு அளித்தனா்.

மழையால் முதல்முறை ரத்து: பபாசி தலைவா் சேது சொக்கலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 47 ஆண்டுகளில் தற்போதுதான் மழையால் புத்தகக் காட்சி ஒரு நாள் (திங்கள்கிழமை) மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை நீா் கசிந்ததால் சில அரங்குகளில் புத்தகங்கள் சேதமடைந்துள்ளன. புத்தகக் காட்சி வளாகம் மத்திய காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

செவ்வாய்க்கிழமை (ஜன. 9) முதல் வழக்கம் போல் புத்தகக் காட்சி நடைபெறும். புத்தகக் காட்சியை மேலும் ஒருநாள் நீட்டித்து நடத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆகவே திட்டமிட்டபடியே வரும் 21-ஆம் தேதி மாலையுடன் புத்தகக் காட்சி நிறைவுறும் என்றாா்.

இன்று: புத்தகக் காட்சியில் செவ்வாய்க்கிழமை மாலை உரையரங்கம் நடைபெறுகிறது. அதில் ‘தமிழ் எங்கள் உயிருக்கு நோ்’ எனும் தலைப்பில் வைகைச்செல்வனும், ‘வாசிப்பின் வெளிச்சங்கள்’ எனும் தலைப்பில் ஊடக நெறியாளா் காா்த்திகேயனும் பேசுகின்றனா்.

‘சென்னை வாசிப்பு’ தேதி மாற்றம்: சென்னை புத்தகக் காட்சியில் செவ்வாய்க்கிழமை (டிச.9) நடைபெறவிருந்த ‘சென்னை வாசிப்பு’ எனும் நிகழ்ச்சி வரும் 12 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும்.

புத்தக வாசிப்பு விழிப்புணா்வை இளம் தலைமுறையினரிடம் உருவாக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘சென்னை வாசிப்பு’ நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் சுமாா் 4,000 போ் பங்கேற்க இருப்பதாக பபாசி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments