ஒரு சமூகம் எந்தளவுக்கு முற்போக்காகத் திகழ்கிறது என்பதை, அந்தச் சமூகம் எழுத்தாளர்களைக் கொண்டாடுவதைக் கொண்டு அளவிடலாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
'கருக்கு' என்ற தன்வரலாற்றுப் புதினத்தை எழுதியதற்காக எழுத்தாளர் பாமா (எ) பாஸ்டினா சூசைராஜுக்கு தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான ஔவையார் விருது கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் எழுத்தாளர் பாமா இன்று (ஜூன் 11) பெற்றுக்கொண்டார். (உடல்நிலை சரியில்லாததால் தாமதமாகப் பெற்றார்)
எழுத்தாளர் பாமாவுக்கு ஒளவையார் விருது வழங்கி பாராட்டு தெரிவித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது,
''ஒரு சமூகம் எந்தளவுக்கு முற்போக்காகத் திகழ்கிறது என்பதை, அந்தச் சமூகம் எழுத்தாளர்களைக் கொண்டாடுவதைக் கொண்டு அளவிடலாம். எளிய மக்களின் வாழ்வியலைத் தங்களது எழுத்தின் வழியாக உணர்த்தி மாற்றங்களுக்கு வித்திடும் எழுத்தாளர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
எழுத்தாளர் பாமாவை நாம் போற்றுவது காலத்தின் தேவையாகிறது. அவரது தாக்கம் புதிய பெண் எழுத்தாளர்களைத் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
உடல்நிலை காரணமாகத் தாமதமாக அவர் இந்த ஔவையார் விருதை பெற்றுக்கொண்டிருக்கிறார். அந்த விருதை நான் வழங்கியபோது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை!
அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும்! அவரது எழுத்துகள் இன்னும் பலரை எழுதத் தூண்ட வேண்டும்!'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
சாதி, மதம், பாலினம், இனம் எனப் பல்வேறு அடையாளங்களினூடே ஒடுக்குமுறையின் அரசியலை அழுத்தமாகப் பேசுகிறது 'கருக்கு' புதினம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.