தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்த ‘நீங்கள் நலமா’ திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி, “உங்கள் ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை. நாங்கள் நலமா இல்லை.” என விமரிசித்தார்.
இந்த நிலையில் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அவரது எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ளார். அதில், "மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் அவர்கள், தான் நலமாக இல்லை என்று முதல்வருக்கு முறையிட்டிருக்கிறார் !
விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
பதவியைக் காப்பாற்றுவதற்காக பா.ஜ.க.வுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் செய்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
தூத்துக்குடியில் மக்களைக் குருவிகளைப் போல சுட்டுத் தள்ளிய ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
பொள்ளாச்சி இளம்பெண்களை சீரழித்த கொடூரன்களுக்கு பாதுகாப்பு அளித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான சிஏஏ-வுக்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
கரோனாவில் ப்ளீச்சிங் பவுடர் வரை கொள்ளையடித்த ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
கட்சித் தலைவி வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும் கொள்ளையும் நடக்க விட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?" எனத் தெரிவித்துள்ளார்.