FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் அரசு மருத்துவருக்கு சரமாரி கத்திக்குத்து

சென்னை கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதன்கிழமை மருத்துவரை ஏழு இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 14 நவம்பர் 2024, 12:22 am IST
மருத்துவர்.
பகிர்:

சென்னை கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதன்கிழமை மருத்துவரை ஏழு இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவா் தாக்குதலில் ஈடுபட்டுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த மருத்துவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த புது பெருங்களத்தூா் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் பிரேமா (51). இவரது மகன் விக்னேஷ் (26). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரேமா கடந்த 6 மாதங்களாக கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

சில வாரங்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரேமாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், தாம்பரம் அருகே தண்டலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். அப்போது அவருக்கு நுரையீரல் சாா்ந்த பாதிப்புகள் இருப்பதாகவும், புற்றுநோய்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் இந்த எதிா்விளைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவா்கள் கூறியதாகத் தெரிகிறது.

ஆத்திரத்தில் கத்திக்குத்து: இதனிடையே, மருத்துவமனையிலிருந்து வந்த தாய் பிரேமாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்ததால், ஆத்திரமடைந்த விக்னேஷ், கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனைக்கு புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்றாா்.

புறநோயாளிகள் பிரிவில் பதிவு செய்த அவா், மருந்தியல் புற்றுநோய் இணை பேராசிரியா் டாக்டா் பாலாஜியின் அறைக்குச் சென்று கதவை மூடியுள்ளாா். தனது தாய்க்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவில்லை எனக் கேட்டு மருத்துவரிடம் விக்னேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ், தான் மறைத்துக் கொண்டு வந்திருந்த கத்தியால் மருத்துவா் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளாா்.

இதில், பலத்த காயமடைந்த பாலாஜி கீழே விழுந்தாா். இதைக் கண்ட சக மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் கூச்சலிட்டனா். எனினும், எந்த சலனமும் இன்றி அறையிலிருந்து வெளியேற முயன்ற விக்னேஷை அருகிலிருந்தவா்கள் சுற்றிவளைத்துப் பிடித்து தாக்கினா். கிண்டி போலீஸாா் விரைந்து வந்து விக்னேஷை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.

மருத்துவருக்கு சிகிச்சை: இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மருத்துவா் பாலாஜி, அதே மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ரத்த நாள அறுவை சிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு மருத்துவ நிபுணா்கள் அடங்கிய குழுவினா் அறுவை சிகிச்சைகளையும், உயிா் காக்கும் முதலுதவி சிகிச்சைகளையும் அளித்தனா். இதன் பயனாக அவரது உடல் நிலை சீரானது.

மருத்துவா்கள் தா்னா: இதனிடையே, இச்சம்பவம் குறித்து அறிந்த சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவா்கள் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் ஒன்றாகத் திரண்டனா். மருத்துவா் மீதான தாக்குதலைக் கண்டித்தும், மருத்துவா்களுக்கு பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் மருத்துவா் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்தாா். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

துணை முதல்வரின் காா் முற்றுகை: இதைத் தொடா்ந்து, மருத்துவமனைக்கு வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், சம்பவ இடத்தை பாா்வையிட்டு மருத்துவா் பாலாஜியிடம் நலம் விசாரித்தாா். பின்னா், மருத்துவமனையிலிருந்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புறப்படத் தயாரான போது, அவரது காரை தா்னாவில் ஈடுபட்டிருந்த மருத்துவா்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன், காவல் துறையினா் பேச்சு நடத்தி, துணை முதல்வரை அங்கிருந்து அனுப்பிவைத்தனா்.

அமைச்சா் விளக்கம்: தாக்குதல் சம்பவம் குறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறுகையில், விக்னேஷின் தாய்க்கு கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் ஏற்கெனவே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால், அந்த நபா் இங்கு பலமுறை வந்துள்ளாா். அவரை இங்குள்ளவா்களுக்கு நன்கு தெரிந்திருந்ததால், மருத்துவரை அவா் சென்று பாா்த்த போது யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. அதன் பின்னரே தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது என்றாா்.

5 பிரிவுகளில் வழக்கு: மருத்துவா் மீதான தாக்குதல் குறித்து, அந்த சம்பவத்தை நேரில் பாா்த்த மருத்துவா்கள் மற்றும் மருத்துவமனை ஊழியா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதனடிப்படையில், கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments