ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய விவகாரம்: அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு!
இபிஎஸ் பொதுக்கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம்....
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டத்தில், ஆம்புலன்ஸை தடுத்து அதில் இருந்த ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று(ஆக. 25) ஞாயிற்றுக்கிழமை துறையூர் பேருந்து நிலைய பகுதிக்கு அவர் வந்தார். அவர் வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, அதிமுக கூட்டத்துக்குள் நுழைந்த 108 ஆம்புலன்ஸை அதிமுகவினர் தடுத்து நிறுத்தி அதிலிருந்த பணியாளா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
தொடர்ந்து வாகனத்துக்குள் நோயாளி இருக்கிறாரா என அதிமுகவினர் சோதனை செய்தனர். அப்போது நோயாளி இல்லாததை பார்த்ததும், ஆத்திரமடைந்து கூச்சலிட்ட அதிமுகவினரிடம், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் நோயாளியை ஏற்றுவதற்காக செல்வதாக கூறியும் அதிமுகவினர் சமாதானம் அடையவில்லை.
அப்போது, ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் அதன் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அதிமுக நகரச் செயலாளர் பாலு உள்ளிட்ட 14 பேர் மீது 6 பிரிவுகளில் துறையூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.