திருப்பரங்குன்றம் விவகாரம்: முதன்முறையாக மௌனம் கலைத்த தவெக!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசு வழக்குரைஞர் தவறான தகவலை அளித்ததாக தவெக இணைச் செயலாளர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசு வழக்குரைஞர் தவறான தகவலை அளித்ததாக தவெக இணைச் செயலாளர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
சென்னை, பனையூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல் குமார், ``திருப்பரங்குன்றம் தீப விவகாரம் நீதிமன்றத்தில் உத்தரவுகள் நிலுவையில் உள்ளது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும், 3 நாள்களாக திமுக எதற்காக காத்துக் கொண்டிருந்தது? கூட்டம் கூடியும், சட்டம் - ஒழுங்கு சீர்கெடும் வரையில் ஏன் அவர்கள் தாமதம் காத்தனர் என்பதுதான் தெரியவில்லை.
மேலும், திமுக தரப்பிலான அரசு வழக்குரைஞர், `6 மணிவரையில் நேரமுண்டு; விளக்கேற்றுவோம்’ என்ற தவறான தகவலை நீதிமன்றம் வாதாடினர். இதுபோன்று தவறான தகவல்களை வாதங்களாக அவர்கள் நீதிமன்றத்தில் முன்வைத்தனர். திமுகவின் அரசு வழக்குரைஞர் ஏன் நீதிமன்றத்தில் தவறான வாதத்தை வைக்க வேண்டும்?
இல்லை அல்லது ஆம் என்று சொல்லியிருக்க வேண்டும். 6 மணிவரையில் நேரமிருக்கிறது; விளக்கேற்றுவோம் என்று சொன்னதால்தான், இவ்வளவு கூட்டம் கூடியது என்ற சந்தேகம் எழுகிறது.
தவறான தகவலால், இந்த அரசே அசாதாரண சூழலை ஏற்படுத்தியதாகத் தோன்றுகிறது. கண்டிப்பாக, இதனை அவர்களால் முன்பே தடுத்து நிறுத்தியிருக்க முடியும்’’ என்று தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தவெக தொடர்ந்து மௌனம் காப்பதாகக் கூறப்பட்டு வந்தநிலையில், நிர்மல் குமார் பேட்டியளித்துள்ளார்.
இதையும் படிக்க: கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சிறப்புக் குழு! தவெக நிறைவேற்றிய 4 தீர்மானங்கள்!