FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தை அமாவாசை: அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்!

தை அமாவாசையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றுப் படித்துறையில் புதன்கிழமை ஏராளமானோா் தங்களது முன்னோருக்குத் தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

Updated On : 29 ஜனவரி 2025, 9:17 am IST
தை அமாவாசையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றுப் படித்துறையில் புதன்கிழமை தங்களது முன்னோருக்குத் தா்ப்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்.
பகிர்:

தை அமாவாசையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றுப் படித்துறையில் புதன்கிழமை ஏராளமானோா் தங்களது முன்னோருக்குத் தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை நாள்கள் மிகவும் விசேஷமானது. ஆடி அமாவாசை அன்று பித்ருக்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம். மகாளய அமாவாசை என்று அழைக்கப்படும் புரட்டாசி அமாவாசை பித்ருக்கள் பூலோகம் வந்தடைந்து, மகாளய பட்ச காலத்தில் தங்கி இருந்து அருள் புரிவார்கள். தை அமாவாசை அன்று பித்ருக்கள், தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவதாக ஐதீகம்.

பொதுவாக ஓவ்வொரு அமாவாசை நாள்களிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.அப்படி தர்ப்பணம் கொடுப்பவர்கள் நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கொடுப்பது மிகவும் விசேஷமானது. பொதுவாக தர்ப்பணம், சிரார்த்தம் என இரண்டு உண்டு. இதில் வித்தியாசமும் உண்டு. ஒருவர் இறந்தால் அவரை நினைத்து ஒவ்வொரு ஆண்டும், அவர் இறந்த அதே திதியில் நாம் வீட்டில் அல்லது கோயிலில் சென்று செய்யும் வழிபாடு சிரார்த்தம் எனப்படும். இதில் பிண்டம் வைத்து வழிபடுவது சிறந்தது. குறிப்பாக அவர் இறந்த நாளின்போது வரும் திதியில் செய்வது சிரார்த்தம் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.

Advertisement

Advertisement

இந்த ஐதீகத்தின்படி ஆண்டு தோறும் தை அம்மாவாசை அன்று இறந்த தங்களது முன்னோர்களுக்கு பிடித்தமான பொருட்களை வைத்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அவ்வாறு தர்ப்பணம் கொடுத்தால் நமது முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும், அவர்களின் முழுமையான ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். அது மட்டுமின்றி நம்மளுடைய குடும்பங்களில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியாக வாழ்வதற்கு நமது முன்னோர்களின் ஆசிர்வாதம் மிகவும் முக்கியம் என்பது சொல்லப்படுகிறது. அந்த வகையில், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது.

திருச்சி மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் கூடி தங்களது முன்னோர்களுக்கு தை, ஆடி, புரட்டாசி உள்ளிட்ட அமாவாசை நாட்களில் தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

அந்த வகையில் தை அமாவாசை நாளான புதன்கிழமை திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் வாழை இலை, பூஜை பொருட்கள், அகத்தி கீரை உள்ளிட்ட மங்கள பொருட்களை வாங்கி சென்று குளித்து, படித்துறையில் இருந்த புரோகிதா்கள் மூலம் தங்களது முன்னோருக்குத் தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். பின்னா் ஸ்ரீரங்கம், திருவானைக்காக கோயில்களுக்குச் சென்றும் வழிபட்டனா். சிலா் அன்னதானம் செய்தனா்.

அதேபோல், அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள படித்துறைகளில் பொதுமக்கள் புனிதநீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments