மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட கமல்ஹாசன், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன்' என்றும், 'இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன்' என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மாநிலங்களவை உறுப்பினராக எனது பயணத்தைத் தொடங்கினேன்.
இந்தத் தருணத்தில் தமிழ்நாடு முதல்வர், அன்பிற்கினிய நண்பர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு துணை முதல்வர், பிரியத்துக்குரிய இளவல் உதயநிதிக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் என் ஆருயிர் நண்பர் திரு. ஸ்டாலின் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்பவிருக்கிறார் எனும் செய்தி பெருமகிழ்ச்சியைத் தருகிறது. அவருக்கு நல்ல உடல் நலமும், மகத்தான வெற்றிகளும் என்றென்றும் தொடர இந்நாளில் அவரை உளமார வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் உள்பட 4 பேர் மாநிலங்களவை உறுப்பினராக தமிழ் மொழியில் பதவியேற்றுக் கொண்டனர். கமல்ஹாசனைத் தவிர்த்து, திமுகவின் பி. வில்சன், கவிஞர் ராஜாத்தி என்கிற சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரும் தமிழ் மொழியில் பதவியேற்றுக் கொண்டனர். அதிமுகவின் இன்பதுரை, முன்னாள் எம்எல்ஏ தனபால் ஆகிய இருவரும் வருகிற திங்கள்கிழமை(ஜூலை 28) பதவியேற்கவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவைச் சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி. வில்சன், அதிமுகவின் சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.