தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைகிறதா அதிமுக? - அண்ணாமலை கூறுவதென்ன?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறதா அதிமுக...
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணையுமா இல்லையா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தில்லிக்கு பயணம் மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பேசுகையில், “மத்திய உள்துறை அமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். எடப்பாடி பழனிசாமியின் தில்லி பயணம் குறித்து நாளை கூறுகிறேன். எங்களுக்குள் அரசியல் கணக்கு என்று எதுவுமில்லை. எங்களுடைய நோக்கம் அதுவல்ல. தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
Advertisement
தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து இணையலாம்.
அதிமுகவின் அனைத்து அணிகளும் பாஜகவுடன் இணைந்துதான் பயணித்து வருகின்றன. எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், ஓபிஎஸ் அனைவருமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துதான் செயல்பட்டு வருகின்றனர்.
நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை. வருகிற தேர்தல் களம் தேர்தல் வரலாற்றில் மிகவும் வித்தியாசமான தேர்தல் களமாக இருக்கும். வலிமையான கட்சிகள் 4-5 கூட்டணிகளாக உருவாகி இருக்கின்றன. திமுக, அதிமுக, பாஜக, சீமான், விஜய் ஆகியோரின் தலைமையில் தனித்தனியே கூட்டணிகள் உருவாகியுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான விவரம் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.