தமிழகம் அருகே கரையைக் கடக்கும் காற்றழுத்த மண்டலம்! புயலாக மாறும் வாய்ப்பு குறைவு!
தமிழகம் அருகே காற்றழுத்த மண்டலம் கரையைக் கடக்கவிருப்பது பற்றி...
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழகம் அருகே காற்றழுத்த மண்டலமாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மையம் கொண்டுள்ளது.
இதன்காரணமாக தமிழகம், புதுவையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. பல மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
“வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை 5.30 மணி நிலவரப்படி தமிழக கடற்கரையை ஒட்டி நகர்ந்துள்ளது.
வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணிநேரத்தில் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு மற்றும் மேற்குமத்திய வங்கக் கடலில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும்.
அதன் பிறகு, அடுத்த 12 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்துக்கு இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாகவோ, புயலாகவோ வலுப்பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.