பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்டும் பணிகள் மேற்கொள்ளக் கூடாது: உயர் நீதிமன்றம்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்டும் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலப் பகுதியில், குடியிருப்பு வளாகம் கட்டும் பணிகளை நிறுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாகம் கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி அதிமுக சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், 1,400 குடியிருப்புகளை சதுப்பு நிலப் பகுதியில் கட்ட சிஎம்டிஏ அனுமதி வழங்கியது சட்டவிரோதம். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கி.மீ. சுற்றளவுக்கு எந்தக் கட்டுமானமும் செய்யக் கூடாது என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இதனைக் கேட்ட நீதிபதி, உச்ச நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு தெரியாமல், சதுப்பு நிலப் பகுதியில் குடியிருப்புகள் கட்ட சிஎம்டிஏ அனுமதி தந்தது எப்படி? என கேள்வி எழுப்பினார்.
குடியிருப்புகள் கட்ட சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு அனுமதி கிடைத்ததால்தான், சிஎம்டிஏ அனுமதி வழங்கியதாகவும், சதுப்பு நில எல்லையைத் துல்லியமாக தீர்மானிப்பது குறித்த ஆய்வுப் பணிகள் 2 வாரத்தில் முடியும் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த மனுவுக்கு நவம்பர் 12ஆம் தேதிக்குள் மத்திய அரசும், தமிழக அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், சதுப்பு நிலப் பகுதியில் குடியிருப்புகள் கட்டவும் தடை விதித்துள்ளது.
மழைக் காலங்களில், சென்னையை பெரும் வெள்ளத்திலிருந்து தடுக்கும் முக்கிய வடிகால் பகுதி பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிகள் என்றும், இங்கு அதிக வெள்ளம் தேங்காத வகையிலும், ஈரப்பதம் குறைந்து வறண்டு போகாத வகையிலும் பாதுகாப்பது அவசியம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அதிமுக வழக்குரைஞா் அணி நிா்வாகி பிரஸ்நேவ் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், குப்பைகள் கொட்டுவதால் ஏற்கெனவே பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்கு எந்த கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி வழங்கக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு பல்வேறு நன்மை அளிக்கும் சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட சதுப்பு நிலத்தில் தனது அதிகார எல்லையை மீறி தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.
அதேவேளையில், சென்னை பள்ளிக்கரணையில் கட்டுமான அனுமதி கொடுத்த பகுதி, ராம்சா் தலம் இல்லை என்று தமிழக அரசு சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
High Court orders that residential construction work should not be carried out in Pallikaranai swamp land
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.