85% வேட்பாளர்கள் இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகை
இன்று இரவோ, நாளை காலையோ காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என செல்வப்பெருந்தகை பேசியது குறித்து...
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (ஏப். 2) தெரிவித்தார்.
எஞ்சிய 15% வேட்பாளர்கள் விரைவில் இறுதி செய்யப்பட்டு இன்று இரவோ அல்லது நாளை காலையோ முழுப் பட்டியல் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டார்.
தில்லியில் நடந்த காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனைக் குழு கூட்டம் இன்று (ஏப். 2) நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கிரிஷ் சோடங்கர், ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுடன் பேசியதாவது:
’’மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் 85 விழுக்காடு தொகுதிகளில் வேட்பாளர்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.
எஞ்சிய 15% இன்னும் ஓரிரு மணி நேரத்தில் முடிவு செய்யப்படும். இன்று காலையோ அல்லது நாளை காலையோ முழு வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும்.
தேசிய கட்சி என்பதால் ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாஜக இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அவர்களிடம் இதே கேள்வியை கேட்க வேண்டும்’’ என செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார்.