விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: பெற்றோருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவு!
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு தொடர்பாக....
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில், மாணவியின் பெற்றோருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி, கடந்த 10-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் மாணவி வீட்டுக்கு திரும்பாததால், பெற்றோர், உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர். இதனிடையே, கடந்த 11-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள முள்புதருக்குள் உடலில் காயங்களுடன் மாணவி சடலமாகக் கிடந்தார்.
அவரது உடலை மீட்ட போலீஸார், உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக 10 தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த முனியசாமி மகன் மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரனை (37) தனிப்படை போலீஸார் கைது செய்து, தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
தர்ம முனீஸ்வரனை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்ம முனீஸ்வரன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். திடீரென அங்கிருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, போலீஸார் தர்ம முனீஸ்வரனை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஏற்கெனவே கீழஈராலில் நடைபெற்ற மூதாட்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தால் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் தர்ம முனீஸ்வரன்.
மேல்முறையீடு செய்ததால் நீதிமன்ற உத்தரவுப்படி பிணையில் வந்த இவர், தூத்துக்குடி நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில், பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இவர் கைதானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தூத்துக்குடி விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்தவும், அரசு உரிய இழப்பீட்டை வழங்கவும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மாணவியின் பெற்றோருக்கு ரூ. 5 லட்சம் கூடுதலாக இழப்பீடு வழங்கவும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை நடத்த அரசு தரப்பில் வழக்குரைஞரை நியமிக்கவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.