சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!!
சென்னை மாநகர காவல் ஆணையர் அருணை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...
சென்னை மாநகர காவல் ஆணையர் அருணை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தலை வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் அதன் பார்வையாளர்கள் மூலம் கண்காணித்து வருகிறது.
Advertisement
Advertisement
இதையொட்டி, ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகளை மாற்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
இதேபோல, தமிழ்நாட்டில் தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை மாற்றி கடந்த ஏப். 8 ஆம் தேதி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பதவியில் இருந்து மாற்றப்பட்ட காவல் ஆணையர் அருண் வாக்குப் பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த பணியிலும் ஈடுபட மாட்டார் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபின் தினேஷ் மோதக் சென்னையின் புதிய காவல் ஆணையாராக பொறுப்பேற்க உள்ளார். 1997 ஐபிஎஸ் அதிகாரியான அபின் தினேஷ் மோடக், மாநில குற்ற ஆவணக் காப்பகம், பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றியுள்ளார். மேலும், சிபிஐ மற்றும் என்.ஐ.ஏ. போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளிலும் பணியாற்றியவர்.
முன்னதாக, சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் பாரபட்சமாக செயல்படுவதாக தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.