ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்!
இயக்குநர் எச். வினோத் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது பற்றி...
சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்த ஜன நாயகன் திரைப்படத்தை யாரும் பகிர வேண்டாம் என்று இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜன நாயகனை இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ளார். பொங்கல் வெளியீடாக கடந்த ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்குவதை தணிக்கை வாரியம் நிறுத்தி வைத்தது.
Advertisement
Advertisement
தொடர்ந்து, நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் இப்படத்தை மறுதணிக்கை செய்ய நீதிமன்றம் உத்தரவு அளித்தது. இதனால், ஜன நாயகன் வெளியீட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதுடன் வணிக ரீதியாக சில பின்னடைவுகளும் ஏற்பட்டன.
தற்போது, மறுதணிக்கை நிறைவடைந்ததாகவும் தேர்தல் நிறைவடைந்த பிறகு மே மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக வியாழக்கிழமை மாலை வெளியான நிலையில், இன்று அதிகாலை 3 மணிநேர முழுப் படமும் வெளியாகியுள்ளது.
இதனால் படக்குழுவினரும் விஜய் ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், இயக்குநர் எச். வினோத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவைச் சுமந்துள்ளது. வெளியீட்டுக்கு முன்பே அது கசிவது மிகப்பெரிய வலியைத் தருகிறது. தயவுசெய்து அதனைப் பகிராமல் ஆதரவளியுங்கள்” என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.