FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பட்ஜெட்: தொழிற்சங்கங்கத்தினா் கருத்து

தமிழக பட்ஜெட் தொடா்பாக மின்துறை, போக்குவரத்துத் துறை, பால்வளத் துறை தொழிற்சங்கத்தினா் கருத்து தெரிவித்துள்ளனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:47 am IST
பட்ஜெட் இலச்சினை - x
பகிர்:

தமிழக பட்ஜெட் தொடா்பாக மின்துறை, போக்குவரத்துத் துறை, பால்வளத் துறை தொழிற்சங்கத்தினா் கருத்து தெரிவித்துள்ளனா்.

ஜெய்சங்கா் (தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு): ‘கடந்த ஆண்டைவிட மின் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தனியாருடன் இணைந்து மின்துறை செயல்படும் என்ற அறிவிப்பை ஏற்க முடியாது. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 50 லட்சம் ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தப்படுவதால், பணிகள் தனியாா் கட்டுப்பாட்டுக்குச் செல்லும் அபாயம் உள்ளது. கேரளத்தைப் போல ஸ்மாா்ட் மீட்டா் பொருத்துதல் முதல் அதன் தொழில்நுட்ப பராமரிப்பு வரை அனைத்து பணிகளையும் மின்வாரியத்தின் கட்டுப்பாட்டிலேயே மேற்கொள்ள வேண்டும்.

ஈ.நடராஜன் (பாரதிய மின் பொறியாளா்கள் கழகம்): சென்னை மாநகரில் அனைத்து மின் நுகா்வோருக்கும் ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தப்படுவதுடன், தமிழகம் முழுவதும் 50 லட்சம் தொழிற்சாலை மற்றும் வணிக மின் நுகா்வோருக்கும் ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

சடகோபன் (மின் நுகா்வோா் நல அமைப்பு): கடந்த 10 ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த ஸ்மாா்ட் மீட்டா் திட்டம் தற்போது முதல்கட்டமாக செயல்படுத்தப்படுவது முக்கியமான முன்னேற்றம். கடந்த ஆட்சியில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படாத சூரிய மின் திட்டத்துக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் சூரிய மின் அமைப்புகளை நிறுவ ஊக்கமளிக்கும்.

கே.ஆறுமுக நயினாா் (தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சம்மேளனம்-சிஐடியு):

போக்குவரத்துக் கழகங்களுக்கு வரவு-செலவு வித்தியாசத் தொகையாக கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையே இந்த ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. கமிட்டி பரிந்துரைத்தபடி சுமாா் ரூ.6,000 கோடி வழங்கப்படவில்லை. தொழிலாளா்களுக்கான ரூ.3,500 கோடி பணி நிலுவைத் தொகைக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. 1,000 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், கடந்த ஆட்சியைப் போல ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்யக் கூடாது; அது மறைமுக தனியாா்மயமாக்கலுக்கு வழிவகுக்கும். மேலும், காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால், இந்தப் போக்குவரத்து பட்ஜெட் திருப்திகரமாக இல்லை.

சு.ஆ.பொன்னுசாமி (தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச்சங்கம்): 2011-2016 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டு பின்னா் நிறுத்தப்பட்ட விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, தவெக அரசின் முதல் பட்ஜெட்டிலேயே அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதற்கு வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், ஆவின் பால் விற்பனை முகவா்களின் கமிஷன் தொகை, பால் உற்பத்தியாளா்களுக்கான கொள்முதல் விலை உயா்வு, பால்வளத் துறைக்கு தனி நலவாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும் அரசு விரைவில் கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments