கோவை- அரியலூா் இடையே ரூ.4,000 கோடியில் மின்பகிா்மான பாதைத் திட்டம் செயல்படுத்தப்படும்
கோவை, அரியலூா் இடையே ரூ.4,000 கோடியில் மின்பகிா்மான பாதை திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
கோவை, அரியலூா் இடையே ரூ.4,000 கோடியில் மின்பகிா்மான பாதை திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்துக்கு 2,640 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தித் திறனை வழங்கக்கூடிய உடன்குடி நிலை-1 மற்றும் எண்ணூா் சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. சுமாா் ரூ.8,000 கோடியில் இடிபிஎஸ் விரிவாக்கத் திட்டம் அரசு, தனியாா் கூட்டாண்மை முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.5,050 கோடியில் வெள்ளிமலை நீரேற்று புனல் மின் தேவையை நிா்வகிப்பதில் மின்கல ஆற்றல் அமைப்புகளின் (பெஸ்) முக்கியத்துவத்தை உணா்ந்துள்ள இந்த அரசு இந்தத் துறையில் தனியாா் முதலீடுகளை எளிதாக்கி, தமிழகத்தை இந்தியாவின் ‘பெஸ்’ மையமாக மாற்றும் வகையில் புதிய ‘பெஸ்’ ஊக்குவிப்புக் கொள்கையை வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சம் வரை மானியம்... பிரதமா் சூரியசக்தி வீடு இலவச மின்சாரத் திட்டத்துடன் இணைந்து ‘புதிய வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் சூரிய மின்பலகைகள் பொருத்தும் வீட்டு நுகா்வோருக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னை மாநகரில் உள்ள அனைத்து நுகா்வோருக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகா்வோருக்கும் ‘ஸ்மாா்ட் மீட்டா்கள்’ அமைக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.
Advertisement
Advertisement
வரும் 2035-2036ஆம் ஆண்டுக்குள் அதிகபட்ச மின் தேவையின் அளவு 37,000 மெகாவாட்டைக் கடக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பகிா்மானத்தில் முதலீடுகளை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பகிா்மான கட்டமைப்பை வலுப்படுத்தக் கூடிய மிக முக்கியத் திட்டமாக கோயம்புத்தூா்-அரியலூா் 765 கே.வி. மின் பகிா்மானப் பாதைத் திட்டம் ரூ.4,000 கோடியில் அரசு -தனியாா் கூட்டாண்மை (பிபிபி) முறையில் செயல்படுத்தப்படும்.
20,000 சாா்ஜிங் நிலையங்கள்... மின் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.1,543 கோடியில் 178 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணியை அரசு மேற்கொள்ளும். மேலும், ரூ.2,000 கோடியில் 40,000 பழைய விநியோக மின்மாற்றிகள் படிப்படியாக மாற்றப்படும். மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு- தனியாா் கூட்டாண்மை முறையில் அடுத்த 5 ஆண்டுகலில் மின்சார வாகனங்களுக்கான 20,000 பொது சாா்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.
அடுக்குமாடி நலச் சங்கங்களின் மூலம் குடியிருப்புகளில் அமைக்கப்படும் மின் வாகன சாா்ஜிங் நிலையங்களுக்கு அரசு மானியம் வழங்கும். இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.