தமிழக பட்ஜெட் 2026! சுடர் திட்டம் அறிமுகம்! மாணவர்கள் வாழ்வில் புதிய ஒளி!
தமிழக பட்ஜெட் 2026ல் சுடர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, வசதியற்ற மாணவர்கள் வாழ்வில் புதிய ஒளி ஏற்றப்படும் என அறிவிப்பு.
2026 - 27ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் சுடர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சர் வெளியிட்ட சுடர் திட்டம் குறித்த அறிவிப்பில்,
தமிழ்நாடு அரசு நீட் தேர்வினை கடுமையாக எதிர்க்கிறது. நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது.
Advertisement
Advertisement
கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி இன்றியமையாதது
கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி என்பது ஓர் இன்றியமையாத தகவல் தொழில்நுட்பச் சாதனமாக உள்ளது. எனவே, கல்லூரி மாணவர்களுக்கான வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்தும். 2000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டிலான இத்திட்டம் கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் ஒரு கருவியாக அமையும்.
கல்வி கரையில, கற்பவர் நாள் சில
என்ற நாலடியாரின் காலத்தால் அழியாத ஞானத்தை வழிகாட்டியாகக் கொண்டு, போதிய வசதியற்ற வாழ்க்கைச் சூழலால் எந்தவொரு மாணவரின் கற்றலும் தடைபடாதிருப்பதை உறுதி செய்வது நமது தலையாய கடமையாகும்.
மாநிலம் முழுவது, 10 கோடி ரூபாய் ஆரம்ப மூலதனத்துடன் தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம்' (TNSHIC) என்ற சிறப்பு நோக்கு நிறுவனம் (Special Purpose Vehicle) ஒன்றை நமது அரசு அமைக்கும். TN-SUDAR (மாணவர் குடியிருப்புகளின் மாநில அளவிலான மேம்பாடு, வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்) என்ற முதன்மைத் திட்டத்தின் கீழ், முக்கியக் கல்வி மையங்களில் ஒரு இலட்சம் நவீன படுக்கை வசதிகளுடன் கூடிய 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள் கட்டப்படும்.
சுமார் 3,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு-தனியார் கூட்டாண்மை (PPP DBFOT) மாதிரியின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு மாநில அரசின் 20 சதவீத கட்டுமான மானியம் (அடுத்த இரண்டு நிதியாண்டுகளில் 640 கோடி ரூபாய்) வழங்கப்படும். இத்திட்டம். பரவலாக உள்ள தங்குமிடங்களை ஒருங்கிணைந்த, உயர்தர வசதிகள் கொண்ட வளாகங்களாக மாற்றியமைக்கும்.
இவ்வளாகங்களில், முழுமையாகக் குளிரூட்டப்பட்ட டிஜிட்டல் கற்றல் மையங்கள், 24 மணி நேரப் பாதுகாப்பு, சுகாதாரமான சமையலறைகள் மற்றும் முழுமையான சமூக சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையிலான தானியங்கி ஒதுக்கீட்டு முறை ஆகியவை இடம்பெறும். வரும் ஆண்டுகளில், பல்வேறு சமூகங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த இளைஞர்களை தமிழ்நாடு சுடர் திட்டம் ஒன்றிணைக்கும்.
2027-28 ஆம் கல்வியாண்டில் மதுரையில் சீர்மிகு சட்டப்பள்ளி தரத்தில் மேம்பட்ட சட்டக் கல்வி வழங்க, சிறப்பு அரசு சட்டக் கல்லூரி 300 மாணவர்களின் சேர்க்கையுடன் தொடங்கப்படும். இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்கு 8,393 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.