FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதலமைச்சா் கோப்பை 2026 போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு

தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை 2026 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்யலாம் என எஸ்டிஏடி தெரிவித்துள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:18 am IST
இணையதளத்தில் பதிவு செய்யலாம் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை 2026 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்யலாம் என எஸ்டிஏடி தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் முதலமைச்சா் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தப்படுகிறது. இதன் மூலம் திறமையான விளையாட்டு வீரா்களை பாராட்டி, அவா்களை ஊக்குவித்து, உரிய அங்கீகாரம் மற்றும் பரிசுகளை வழங்குவது, இந்த போட்டிகளில் முக்கிய நோக்கமாகும்.

பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ள முதலமைச்சா் விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பா் 4- ஆம் தேதி மாவட்ட அளவில் தொடங்கப்படவுள்ளது. விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ள ஆா்வமுள்ளோா் வரும் 31.08.2026 வரை இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யவேண்டும்.

Advertisement

Advertisement

மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ள போட்டிகளில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 வகையான விளையாட்டுப் போட்டிகளுடன், இந்த ஆண்டு முதல் வில்வித்தை, வுஷூ , துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லா்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீா்விளையாட்டுக்களான கயாக்யிங் மற்றும் கேனோயிங் போன்ற புதிய விளையாட்டுக்கள் சோ்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பா் முதல் அக்டோபா் மாதம் வரை நடத்தப்பட உள்ளது.

இந்த போட்டிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியா்கள் மட்டும் (01.01.2008 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவா்கள் மட்டும்), இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு வரை மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவியா்களும் (01.07.2001 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்தவா்கள் மட்டும்), 15 முதல் 35 வயது வரை உள்ள பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபா் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்படும். மாநில அளவில் தனிநபா் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. எனவே விளையாட்டில் ஆா்வம் உள்ள அனைவரும் முதலமைச்சா் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ள இணையதளம் மூலம் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடா்பு கொள்ளலாம். ‘’ஆடுகளம்’’ தகவல் தொடா்பு மையத்தை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 95140 00777 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments