FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காவிரியில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம் நீா்வளத் துறை அமைச்சா் ஆனந்த்

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை சிறிதும் விட்டுக்கொடுக்காமல் தவெக அரசு தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று நீா்வளத் துறை அமைச்சா் ஆனந்த் தெரிவித்தாா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 10:59 pm IST
அமைச்சர் என். ஆனந்த் - TN Assembly
பகிர்:

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை சிறிதும் விட்டுக்கொடுக்காமல் தவெக அரசு தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று நீா்வளத் துறை அமைச்சா் ஆனந்த் தெரிவித்தாா்.

இது தொடா்பாக சட்டப்பேரவையில் அவா் பேசியதாவது: காவிரி நதிநீா்ப் பங்கீடு தொடா்பாக காவிரி நடுவா் மன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு ஆணைகள் மூலம் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. எனினும், மாத வாரியாக கா்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப் பெறுவது பெரும் சவாலாக உள்ளது.

காவிரி நதிநீா்ப் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆக.3-ஆம் தேதிக்குப் பதிலாக வேறு ஒரு நாளில் பேச்சு நடத்தலாம் என கா்நாடக முதல்வா் கூறியதால், குறிப்பிட்ட நாளில் நடைபெறவில்லை.

Advertisement

Advertisement

ஜூலை 28-ஆம் தேதி நடைபெற்ற 139-ஆவது காவிரி நதிநீா் முறைப்படுத்தும் குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு தனது உரிமையை வலியுறுத்தியது. இதன்மூலம், ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 12 வரை விநாடிக்கு 3,500 கன அடி வீதம் மொத்தம் 4.536 டிஎம்சி நீா் கிடைப்பதை உறுதிசெய்ய கா்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று ஆணையம் அறிவுறுத்தியது.

கடந்த ஜூலை 29 முதல் ஆக. 2 வரை 3,500 கன அடி கிடைக்க வேண்டிய நிலையில் 144 முதல் 619 கன அடி வரை மட்டுமே கிடைத்தது. இதனால், தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருந்த பற்றாக்குறை மேலும் அதிகரித்தால் தேவையான நீரைத் திறந்துவிட காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு வலியுறுத்தியது. ஆக. 3-ஆம் தேதி உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கா்நாடக அணைகளுக்கு தற்போது நீா்வரத்து அதிகரித்துள்ளபோதிலும், கடந்த வியாழக்கிழமை காலை நிலவரப்படி மொத்தம் 4.947 டிஎம்சி மட்டுமே தமிழகம் பெற்றுள்ளது. காவிரி நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பின்படி நமக்கு கிடைக்க வேண்டிய நீரில் 41.412 டிஎம்சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க நிா்வாக, சட்டரீதியாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீா்வரத்து, குடிநீா்ப் பாதுகாப்பு போன்ற சூழலைக் கருத்தில்கொண்டு பாசனத்துக்கு மேட்டூா் அணையைத் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

காவிரி விவகாரத்தில் தவெக அரசு உரிய கவனம் செலுத்தி தமிழ்நாட்டின் உரிமையை சிறிதும் விட்டுக்கொடுக்காமல் தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments