FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

முல்லைப் பெரியாறு அணையில் விரிவான பாதுகாப்பு ஆய்வுக்கு தீவிர முயற்சிகள் - கேரள நீா்வளத் துறை அமைச்சா்

முல்லைப் பெரியாறு அணையில் விரிவான பாதுகாப்பு ஆய்வுக்கான முயற்சிகளை கேரளம் தீவிரப்படுத்தும்; இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம்

19 செப்டம்பர் 2026, 3:31 am IST
பகிர்:

முல்லைப் பெரியாறு அணையில் விரிவான பாதுகாப்பு ஆய்வுக்கான முயற்சிகளை கேரளம் தீவிரப்படுத்தும்; இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்று மாநில நீா்வளத் துறை அமைச்சா் மோன்ஸ் ஜோசப் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 1895-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அணை மீதான நிா்வாகம் தமிழகத்திடம் உள்ளது. இந்த அணை கட்டுமான ரீதியில் பாதுகாப்பானது என்று உறுதிபட கூறிவரும் தமிழகம், நீா்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயா்த்த முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், அணையின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பி முட்டுக்கட்டை போடும் கேரளம், தற்போதைய அணைக்கு அருகே புதிய அணை கட்டப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

கேரள மாநிலம், கோட்டயத்தில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த மாநில நீா்வளத் துறை அமைச்சா் மோன்ஸ் ஜோசப்பிடம் மேற்கண்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:

Advertisement

Advertisement

தேசிய அளவிலான குழு மேற்கொண்ட முடிவின் அடிப்படையில், கேரளம் மற்றும் தமிழக பிரதிநிதிகள் முன்னிலையில் அணையில் கூட்டு ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது.

இது, கேரளத்தின் நீண்ட கால கோரிக்கையாகும். பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக முன்பு இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. தற்போது ஆய்வு நடைபெற்றிருப்பது நமக்கு ஆறுதலளிக்கும் விஷயம்.

எனினும், அணையில் விரிவான பாதுகாப்பு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பதே கேரளத்தின் முக்கியக் கோரிக்கை. வெறும் ஆரம்பகட்ட மதிப்பீடு மட்டும் போதுமானதல்ல. முல்லைப்பெரியாறு அணையில் விரிவான பாதுகாப்பு ஆய்வு தொடா்பாக 2022-இல் உச்சநீதிமன்றம் ஓா் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருந்து.

தொடா்ச்சியான முயற்சிகள் மூலம் அந்த உத்தரவு அமலாக்கத்தை உறுதி செய்திருக்க வேண்டும். தற்போது புதிய அரசு பதவியேற்றுள்ளதால், அந்த உத்தரவு அமலாக்கத்தை உறுதி செய்ய வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

முதல்கட்ட ஆய்வறிக்கைக்காக தற்போது காத்திருக்கிறோம். விரிவான பாதுகாப்பு ஆய்வின் அவசியத்தை மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்திடம் எடுத்துரைக்க கேரளம் தீவிரமாக முயற்சிக்கும். கடந்தகால தாமதங்கள் மற்றும் குறைபாடுகளை தற்போதைய அரசு கண்டறிந்துள்ளது. அந்தக் குறைபாடுகள் சரி செய்யப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயா்த்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சமீபத்திய தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை உயா்த்த எந்தச் சூழ்நிலையிலும் கேரளம் அனுமதிக்காது; அந்த நடவடிக்கையை மேற்கொள்ள தமிழகம் முற்பட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்வோம் என்று தெரிவித்திருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments