உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி ரோட்சைட் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!
உணவுப் பிரியர்களுக்கு சந்தோஷமான செய்தியாக இனி சாலையோர உணவகங்களில் சுகாதாரமான உணவு கிடைக்கும் என்பது பற்றி..
தமிழ்நாட்டில் சென்னை உள்பட ஐந்து நகரங்களில், மக்கள் சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் வகையில், தரமான, சுத்தமான சாலையோர உணவகங்களை அமைக்க தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட நகரங்களில், தேர்ந்தெடுத்த பகுதிகளில் சாலையோர உணவகங்கள் அமைக்கப்படுவதற்கான முன்னெடுப்புகள் துவங்கியுள்ளன.
இங்கு தரமான உணவு தயாரிக்கப்படுவதை உறுதி செய்து சான்றிதழ் பெற்ற உணவகங்கள், பாதுகாப்பாக உணவு தயாரிக்க பயிற்சி பெற்ற சமையல் கலைஞர்களால் உணவு தயாரிக்கப்பட்டு சுகாதாரமான முறையில் பரிமாறப்படுவது உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
Advertisement
Advertisement
தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் காளான்கள் போல தள்ளுவண்டிக் கடைகளும், சாலையோர உணவகங்களும் திறக்கப்பட்டு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதால் அதனை சாப்பிடும் மக்களுக்கும் பல்வேறு உடல் நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இவற்றைத் தவிர்க்க, சுகாதாரமான உணவு, சுத்தமான குடிநீர் சாப்பிடும் இடம் சுற்றிலும் மூடப்பட்டு, கழிவுகளை பத்திரமாக வெளியேற்றுவதற்கான வசதிகளுடன் புதிய சாலையோர உணவகங்கள் விரைவில் திறக்கப்படவிருக்கின்றன.
இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள், சிசிடிவி பாதுகாப்பு என அனைத்தும் உருவாக்கப்படவிருக்கிறதாம்.
இதற்காக மத்திய சென்னையின் சில பகுதிகளும், சென்னையின் இதர பகுதிகளையும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி அதில் முக்கிய இடங்களை தேர்வு செய்யவிருக்கிறார்கள்.
அதுபோல, தேர்வு செய்யப்படும் சாலையோர உணவகங்களுக்கு தேவையான நிதியுதவி செய்யவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தற்போது, இதற்காகவே 100க்கும் மேற்பட்ட உணவகத்தினருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறதாம்.
ஒருவேளை உங்கள் பகுதியிலும் இந்த சாலையோர உணவகங்கள் வரலாம். உணவுப் பிரியர்கள், சாலையோர உணவகங்களின் சுவையான உணவுக்கு அடிமையாகியிருப்பார்கள். ஆனால் அங்கு சாப்பிடுவதால் என்னென்ன பாதிப்பு வருமோ என்ற அச்சிலும் இருப்பார்கள். இனி அச்சமின்றி, சுவையான மற்றும் சுகாதாரமான உணவு கிடைக்கும் என்பது குட் நியூஸ்தானே?
Good news No more fear of eating at roadside stalls
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.