ரேஷன் கடையில் திடீர் ஆய்வு செய்த எம்ஜிஆர் என்ன சொன்னார்? பேரவைத் தலைவர் ருசிகர தகவல்!
1984ல் காரில் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென நிறுத்தி ஒரு ரேஷன் கடையில் எம்ஜிஆர் செய்தது பற்றி பேரவைத் தலைவர் கூறியது...
1984ல் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர், காரில் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென ஒரு ரேஷன் கடையில் ஆய்வு செய்தது பற்றி பேரவையில் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தனது நினைவைப் பகிர்ந்து கொண்டார்.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்களின் தரம், கடந்த திமுக ஆட்சியில் மோசமாக இருந்ததாகவும் தற்போது முதல்வர் விஜய்யின் உத்தரவின்பேரில் தரமான அரிசி வழங்கப்படுவதாகவும் தவெக அமைச்சர்கள் பேசினர். இதற்கு திமுக தரப்பு எம்எல்ஏக்களும் பதில் அளித்தனர்.
இதனிடையே பேரவைத் தலைவா ஜேசிடி பிரபாகர், எம்ஜிஆருடனான ஒரு நிகழ்வைப் பேரவையில் பகிர்ந்துகொண்டார்.
Advertisement
Advertisement
"ஒரு சுவையான, மனதில் என்றும் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. இங்கு இப்போது சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
1984 பிப். 12ம் நாள் எம்ஜிஆருடன் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். மேற்கு கேகே நகர் பக்கம் கார் செல்லும்போது ஓரிடத்தில் கூட்டம் அதிகம் இருந்தது.
'இது ரேஷன் கடை, வில்லிவாக்கம் தொகுதியின்கீழ் வருகிறது' என்று சொன்னேன். அவர் உடனே காரை நிறுத்தச் சொல்லி ரேஷன் கடைக்குச் செல்கிறார். அங்கு ஒரு சாதாரண ஸ்டூல் இருந்தது. அதில் அவரே உட்கார்ந்து கொண்டார்.
அரிசியை காண்பிக்கச் சொன்னார். அரிசியை ஆய்வு செய்து எடையையும் சரிபார்த்தார். கடைக்குள் சென்று பார்த்தார். 'கடையை ஒழுங்காக திறக்கிறார்களா?' என்று மக்களிடம் கேட்டார். ஒழுங்காகத் திறக்கிறார்கள் என்று மக்கள் சொன்னார்கள்.
பின்னர் காரின் அருகில் வரும்போது என்னிடம் சொன்னார். 'இது ஒழுங்காக இருக்கும் வரைக்கும் நாம் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வருவோம்' என்று சொன்னார்.
நீங்கள் எல்லாம் இதுபற்றி பேசும்போது எனக்கு இந்த நினைவு வந்தது" என்று கூறினார்.
MGRs surprise inspection of a ration shop; Assembly Speaker shares his memories
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.